தோல்விக்கு காரணம் என்ன: ஸ்மிருதி மந்தனா விளக்கம்

லண்டன்: ''சூழ்நிலைக்கு ஏற்ப எங்களை மாற்றிக் கொள்ளாதது தோல்விக்கு காரணம்,'' என, மந்தனா தெரிவித்தார்.

இங்கிலாந்து சென்றுள்ள இந்திய பெண்கள் அணி, மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் பங்கேற்கிறது. முதல் போட்டியில் இந்தியா வென்றது.

லண்டன், லார்ட்சில் நடந்த 2வது போட்டி மழையால் தாமதமாக துவங்கியது. தலா 29 ஓவர் கொண்ட போட்டியாக நடத்தப்பட்டது. ஸ்மிருதி மந்தனா (42), தீப்தி சர்மா (30*) ஓரளவு கைகொடுக்க இந்திய அணி 29 ஓவரில் 143/8 ரன் எடுத்தது. பின் இங்கிலாந்து அணி 18.4 ஓவரில் 102/1 ரன் எடுத்திருந்த போது மீண்டும் மழை குறுக்கிட்டது. இதனையடுத்து 24 ஓவரில் 115 ரன் என இலக்கு மாற்றப்பட்டது. இங்கிலாந்து அணி 21 ஓவரில் 116/2 ரன் எடுத்து 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. தொடர் 1-1 என சமநிலையில் உள்ளது. மூன்றாவது போட்டி நாளை நடக்கவுள்ளது.
இந்திய அணியின் துணை கேப்டன் மந்தனா கூறுகையில், ''மழையால் ஆடுகளத்தின் தன்மை மாறியது. இதற்கு ஏற்ப எங்களை விரைவாக மாற்றிக் கொள்ள முடியாதது பேட்டிங்கில் பாதிப்பை ஏற்படுத்தியது. லார்ட்ஸ் மைதானத்தில் 'பேட்' செய்வது மிகவும் சவாலானது. நமது வீராங்கனைகள் நிறைய பேர் முதன்முறையாக இங்கு விளையாடுகின்றனர். இது, அவர்களுக்கு சிறந்த அனுபவம் கொடுத்திருக்கும். தவிர நல்ல பாடம் கற்றுக் கொண்டிருப்பர்,'' என்றார்.

Advertisement