அமித் ஷா பிடியில் அ.தி.மு.க., செல்வப்பெருந்தகை தகவல்
சென்னை: தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை அறிக்கை:
மத்திய அரசின் வேளாண் சட்டங்களுக்கும், சிறுபான்மையினரை குறிவைத்து கொண்டு வரப்பட்ட, குடியுரிமை திருத்த சட்டத்திற்கும், அ.தி.மு.க., ஆதரவு அளித்தது.
உதய் மின் திட்டத்தில் சேர்ந்து, மின் கட்டண உயர்வுக்கு காரணமாக இருந்த, அ.தி.மு.க.,வை விட, ஒரு ஜால்ரா கட்சி, வேறு எதுவும் இருக்க முடியாது.
புதிய கல்விக் கொள்கை ஏற்கவில்லை என்ற பெயரில், கல்வித் துறைக்கு நிதி வழங்க, மத்திய அரசு மறுக்கிறது.
தொகுதி சீரமைப்பு எனக்கூறி, தென் மாநில லோக்சபா எம்.பி.,க்கள் எண்ணிக்கையை குறைக்கும் முயற்சியில், மத்திய அரசு ஈடுபட்டுள்ளது. இதை எல்லாம் எதிர்க்காத அ.தி.மு.க.,வை விட, ஒரு அடிமை கட்சி வேறு எதுவும் இருக்க முடியாது.
பழனிசாமி உள்ளிட்ட முன்னாள் அமைச்சர்கள், ஊழல் குற்றச்சாட்டுகளில் சிக்கி, அமலாக்கத்துறை, வருமான வரித்துறை பிடியில் இருக்கிற வரை, அமித் ஷா பிடியில் இருந்து, அ.தி.மு.க., மீள முடியாது. தற்கொலைக்கு சமமான முடிவை, அ.தி.மு.க., எடுத்திருக்கிறது.
பழனிசாமி சுற்றுப் பயணங்களில், மக்கள் முன்னால் நீலிக்கண்ணீர் வடிப்பதை, எவரும் நம்பவும் மாட்டர்; ஏற்றுக் கொள்ளவும் மாட்டர்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.