வலி நிவாரணிகள் சந்தை மதிப்பு 16,000 கோடி ரூபாயாக உயர்வு

புதுடில்லி:நம் நாட்டில், வலி நிவாரண மாத்திரை, தைலம் ஆகியவற்றின் சந்தை மதிப்பு, கடந்த ஐந்து ஆண்டுகளில் இரு மடங்குக்கு மேல் அதிகரித்து, 16,000 கோடி ரூபாயாக உள்ளது.

நீல்சன் நிறுவனம் வெளியிட்ட தரவுகளின்படி, மருத்துவர் பரிந்துரை இன்றி எடுத்துக் கொள்ளப்படும், 'ஓவர் தி கவுன்ட்டர்' எனும் பொது மருந்துகளில், வலி நிவாரணிகள் மிகப்பெரும் பங்கு வகிக்கின்றன.

கொரோனா காலம் துவங்கியது முதல், ஒவ்வொரு வாரமும் சராசரியாக, ஐந்து புதிய வலி நிவாரணி பிராண்டுகள் அறிமுகமாகி வருகின்றன.

கடந்த 2020ம் ஆண்டில் வோலினி, ஆம்னிஜெல், டோலோ, சாரிடான் உள்ளிட்ட 1,552 வலி நிவாரணி பிராண்டுகள் இருந்தன. தற்போது அதன் எண்ணிக்கை, 2,771 ஆக அதிகரித்து உள்ளது. இது குறித்து அத்துறையினர் தெரிவித்துள்ளதாவது:

நுகர்வோர் விரைவாக நிவாரணம் தரும் பிராண்டுகளுக்கு முன்னுரிமை அளிக்கின்றனர். நகரமயமாக்கல் வளர்ச்சி, நாட்பட்ட நோய்கள் அதிகரிப்பு ஆகியவை, வலி நிவாரணிகளை விரைவாக மற்றும் அனைவருக்கும் எளிதாக கிடைக்க வழி செய்துள்ளது.

நகர்ப்புற சந்தைகளில், வாழ்க்கை முறை மாற்றங்களான உடற்பயிற்சி கூடங்களில் ஏற்படும் காயங்கள், விளையாட்டு தொடர்பான சிரமங்கள் ஆகியவை வலி நிவாரணிகள் பயன்பாட்டில் அதிக பங்கு வகிக்கின்றன. ஒருபுறம் தேவை அதி கரித்து வந்தாலும், அதிகப்படியான வலி நிவாரணிகள் பயன்பாட்டின் பக்க விளைவு ஆபத்தானது என மருத்துவ நிபுணர்கள் எச்சரிக்கின்றனர்.
Latest Tamil News
இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

தோல் பராமரிப்பு இரண்டாம் இடம்

 மருத்துவர்கள் பரிந்துரை தேவைப்படாத இரண்டாவது மிகப்பெரிய பிரிவு தோல் பராமரிப்பு

 கிரீம்கள், ஒவ்வாமை மருந்துகள் தேவை அதிகரிப்பு

 கடந்த ஐந்து ஆண்டுகளில், ஆண்டு வளர்ச்சி விகிதம் 8 சதவீதத்துக்கு மேல் உயர்ந்தது

 சந்தை மதிப்பு கிட்டத்தட்ட 14,854 கோடி ரூபாய்

வலி நிவாரணிகள்

ஆண்டு சந்தை மதிப்பு ( ரூ.கோடியில்)

2020 மே 6,820

2025 மே 15,905

ஆண்டு வளர்ச்சி விகிதம்: 18%

சந்தை பங்களிப்பு

வலி நிவாரணி 75%

பாராசிட்டமால் 10%

Advertisement