மஹாராஜா 'டி 20' கிரிக்கெட் மைசூருக்கு இடம் மாறுகிறது?

பெங்களூரு கூட்ட நெரிசல் சம்பவத்தை அடுத்து, மஹாராஜா டி20 கிரிக்கெட் போட்டி, மைசூரில் நடத்த முடிவு செய்யப்பட்டு உள்ளதாக தகவல்கள் கூறுகின்றன.

கர்நாடக மாநில கிரிக்கெட் சங்கம் சார்பில், ஆண்டுதோறும் மஹாராஜா டி20 கிரிக்கெட் போட்டி நடத்தப்பட்டு வருகிறது. இதில் ஆறு அணிகள் பங்கேற்கும். நடப்பாண்டும் ஆக., 11 முதல் 28ம் தேதி வரை பெங்களூரு சின்னசாமி கிரிக்கெட் மைதானத்தில் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

ஆனால், ஜூன் 4ம் தேதி ஆர்.சி.பி., வெற்றி விழா கொண்டாட்டத்தின் போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில், 11 ரசிகர்கள் உயிரிழந்தனர். இச்சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இது தொடர்பாக சங்கத்தின் நிர்வாகிகள், ஆர்.சி.பி., அணி நிர்வாகம் என பலரின் மீது வழக்குகள் நடந்து வருகின்றன.

இந்நிலையில், மஹாராஜா போட்டியை சின்னசாமி கிரிக்கெட் மைதானத்தில் நடத்த நகர போலீசார், அனுமதி மறுத்ததாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

இதையடுத்து, மைசூரில் உள்ள மஹாராஜா கிரிக்கெட் மைதானம் என்று அழைக்கப்படும் ஸ்ரீகண்டதத்த நரசிம்ம ராஜ உடையார் மைதானத்தில் நடத்த திட்டமிடப்பட்டது. இது தொடர்பாக மைசூரு நகர போலீஸ் கமிஷனர் சீமா லட்கருக்கு, சங்கத்தினர் கடிதம் எழுதி உள்ளனர். ஆனால் இதுவரை பதில் எதுவும் வரவில்லை.

கமிஷனர் சீமா லட்கரிடம் கேட்டபோது, 'கிரிக்கெட் சங்கத்தினர் கடிதம் அனுப்பியது உண்மை தான். அவர்களின் விண்ணப்பத்தை பரிசீலித்து வருகிறோம். முடிவெடுப்பதற்கு முன்னர், சங்கத்தினருடன் விவாதிக்கப்படும்' என்றார்.

இது குறித்து சங்கத்தினரிடம் கேட்டபோது, 'இம்முறை மைசூரில் கிரிக்கெட் போட்டி நடத்துவது என்று முடிவு செய்யப்பட்டு உள்ளது. போட்டி நடக்கும் மைதானத்திற்குள் அணியின் உரிமையாளர்கள், ஊடகத்தினருக்கு மட்டுமே அனுமதி வழங்கப்படும். ரசிகர்களுக்கு அனுமதி இல்லை' என்றனர்.


பெங்களூரு சின்னசாமி கிரிக்கெட் மைதானத்தை விட, மைசூரு கிரிக்கெட் மைதானம் சிறிதாக உள்ளது. பேட்டிங்கிற்கு ஏற்ற இந்த மைதானத்தில் நடந்த பல டி20 கிரிக்கெட் போட்டிகளில், சர்வசாதாரணமாக 200 ரன்களை எடுத்து உள்ளனர்

- நமது நிருபர் - .

Advertisement