விநாயகர் சிலைகளை நீர்நிலைகளில் கரைப்பதற்கான வழிகாட்டுதல்கள்; தமிழக அரசு வெளியீடு

சென்னை: விநாயகர் சிலைகளுக்கு வர்ணம் பூசுவதற்கு நச்சு மற்றும் மக்காத ரசாயன சாயம், எண்ணெய் வண்ணப்பூச்சுகளை கண்டிப்பாக பயன்படுத்தக்கூடாது என்று மாசு கட்டுப்பாட்டு வாரியம் அறிவுறுத்தி உள்ளது.
விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு, விநாயகர் சிலைகளை நீர் நிலைகளில் கரைப்பதற்கான வழிகாட்டுதல்களை மாசு கட்டுப்பாட்டு வாரியம் வெளியிட்டுள்ளது.
இதுகுறித்து வெளியிடப்பட்டு உள்ள செய்திக்குறிப்பின் விவரம் வருமாறு;
சுற்றுச்சூழலை பாதுகாப்பதில் தொன்று தொட்டு சிறந்த மாநிலமாக தமிழகம் விளங்கி வருகிறது. நீர்நிலைகளை பாதுகாக்கும் வகையில் வருகிற விநாயகர் சதுர்த்தி விழாவினை கொண்டாடும் போது சிலைகளை நிர்நிலைகளில் கரைப்பதற்கான மத்திய மாசு கட்டுப்பாடு வாரிய வழிகாட்டுதல்கள் படி மாவட்ட நிர்வாகம் குறிப்பிட்டுள்ள இடங்களில் மட்டும் கரைத்து சுற்றுச்சூழலை காக்க வேண்டும்.
எனவே, பொது மக்களுக்கு கீழக்கண்டவாறு வேண்டுகோள் விடப்படுகிறது.
1. களிமண்ணால் செய்யப்பட்டதும் மற்றும் பிளாஸ்டர் ஆப் பாரிஸ், பிளாஸ்டிக் மற்றும் தெர்மாகோல் (பாலிஸ்டிரின்) கலவையற்றதுமான, சுற்றுச்சூழலை பாதிக்காத மூலப்பொருள்களால் மட்டுமே செய்யப்பட்டதுமான விநாயகர் சிலைகளை நீர்நிலைகளில் பாதுகாப்பான முறையில் கரைக்க அனுமதிக்கப்படுகிறது.
2. சிலைகளின் ஆபரணங்கள் தயாரிப்பதற்கு உலர்ந்த மலர்கூறுகள், வைக்கோல் போன்றவை பயன்படுத்தப்படலாம். மேலும் சிலைகளை பளபளப்பாக மாற்றுவதற்கு மரங்களின் இயற்கை பிசின்கள் பயன்படுத்தப்படலாம்.
3. ஒரு முறை பயன்படுத்தும் பிளாஸ்டிக் மற்றும் தெர்மாகோல் பொருட்களை பயன்படுத்தக்கூடாது. நீர்நிலைகள் மாசுபடுவதை தடுக்கும்பொருட்டு வைக்கோல் போன்ற சுற்றுச்சூழலுக்கு உகந்த பொருட்கள் மட்டுமே சிலைகள் தயாரிக்க அல்லது சிலைகள்/பந்தல்களை அலங்கரிக்க பயன்படுத்த வேண்டும்.
4. சிலைகளுக்கு வர்ணம் பூசுவதற்கு நச்சு மற்றும் மக்காத ரசாயன சாயம், எண்ணெய் வண்ணப்பூச்சுகளை கண்டிப்பாக பயன்படுத்தக்கூடாது. சிலைகளின் மீது எனாமல் மற்றும் செயற்கை சாயத்தை அடிப்படையாக கொண்ட வண்ணப்பூச்சுகளை பயன்படுத்தக்கூடாது, மாற்றாக சுற்றுச்சூழலுக்கு உகந்த நீர் சார்ந்த, மக்கக்கூடிய. நச்சு கலப்பற்ற இயற்கை சாயங்கள் மட்டுமே பயன்படுத்தப்பட வேண்டும்.
5. சிலைகளை அழகுபடுத்த வண்ணப்பூச்சுகள் மற்றும் பிற நச்சு ரசாயனங்கள் கொண்ட பொருட்களுக்கு பதிலாக, இயற்கை பொருட்கள் மற்றும் இயற்கை சாயங்களால் செய்யப்பட்ட அலங்கார ஆடைகள் மட்டுமே பயன்படுத்தப்பட வேண்டும்.
6. விநாயகர் சிலைகளை மாவட்ட நிர்வாகத்தினால் குறிப்பிடப்பட்டு உள்ள இடங்களில் மட்டும் மத்திய மாசு கட்டுப்பாடு வாரியத்தின் விதிமுறைகளின் படி கரைக்க வேண்டும்.
இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
மேலும்
-
வரி விதிப்புக்கு நீதிமன்றம் தடை விதித்தால்..: டிரம்ப் எச்சரிக்கை
-
ஸ்குவாஷ்: தான்வி இரண்டாவது இடம்
-
சவாலான ஆஸி., ஹாக்கி தொடர் * கேப்டன் ஹர்மன்பிரீத் சிங் கணிப்பு
-
இந்தியா விரைவில் மிகப்பெரிய சந்தையாக மாறக்கூடும்; கணித்தார் ஓபன் ஏஐ நிறுவன சிஇஓ சாம் ஆல்ட்மேன்!
-
பிரதமர் மோடியின் மன் கீ பாத் நிகழ்ச்சி மூலம் ரூ.34 கோடி வருவாய்: மத்திய அரசு தகவல்
-
சிராஜை முந்திய ஆகாஷ் தீப்: சச்சின் மனம் கவர்ந்த பந்து