கடவுள் ராமர் பற்றிய அவதுாறு: வைரமுத்துவுக்கு பா.ஜ., கண்டனம்

16

சென்னை: ''சென்னை கம்பன் விழாவில், ஹிந்துக்களின் தெய்வமான ராமரை புத்திசுவாதீனமில்லாதவர் என குறிப்பிட்டு பேசிய பாடலாசிரியர் வைரமுத்து மன்னிப்பு கேட்க வேண்டும்,'' என, தமிழக பா.ஜ., மாநில செயலர் அஸ்வத்தாமன் கூறியுள்ளார்.

அவர் மேலும் கூறியதாவது:

சென்னையில் சமீபத்தில் ஆழ்வார் ஆய்வு மய்யம் சார்பில், வைரமுத்துவுக்கு கம்பன் விருது அளிக்கப்பட்டது.

அப்போது பேசிய வைரமுத்து, ஹிந்து கடவுளான ராமர் குறித்து தவறான கருத்துகளை கூறியுள்ளார்.

'திகைத்தனை போலும் செய்கை' என கம்பரின் வரிகளை குறிப்பிட்டு பேசிய வைரமுத்து, 'திகைத்தல் என்ற வார்த்தைக்கு, புத்திசுவாதீனமற்றவர் என்று பொருள்.

'அதனால், புத்திசுவாதீனமின்றி வாலியை கொன்று விட்டார் ராமர் என கூறி, ராமன் என்ற குற்றவாளியை காப்பாற்ற கம்பர் முயன்றிருக்கிறார். இந்திய தண்டனைவியல் சட்டம் 84ன்படி, புத்திசுவாதீனம் அற்றவர் செய்கிற குற்றத்துக்கு தண்டனை இல்லை' என்று கூறியுள்ளார்.

திகைத்தல் என்ற சொல்லுக்கு புத்திசுவாதீனம் அற்றவர் என்ற பொருளை, புத்தியுள்ள யாரும் சொல்ல மாட்டார்கள்.

திகைத்தல் என்றால், வியப்படைதல், தடுமாறுதல், மயங்குதல் என்றே பொருள். வேண்டு மென்றே ராமரை கொச்சைப்படுத்த வேண்டும் என்ற வன்மத்தோடு வைரமுத்து அவதுாறாக பேசியுள்ளார்.

திகைத்தல் என்ற சொல்லுக்குக்கூட பொருள் தெரியாதவரை கவிப்பேரரசு என சிலர் அழைப்பது திகைப்புக்குரியது.

சோழ மாமன்னர்களின் முன்னோர் ராமர் என சோழர் கால செப்பேடுகள் குறிப்பிடுகின்றன. அதனால், ராமரை திட்டமிட்டு விமர்சித்த வைரமுத்து, தமிழர்களிடம் பகிரங்க மன்னிப்புக் கோர வேண்டும்.

இவ்வாறு அஸ்வத்தாமன் கூறியுள்ளார்.

Advertisement