மத்திய அமைச்சர் நிர்மலாவுடன் கனிமொழி, தங்கம் தென்னரசு சந்திப்பு; நிதி விடுவிக்க வலியுறுத்தல்

16

புதுடில்லி:தமிழக நிதியமைச்சர் தங்கம் தென்னரசு, எம்.பி., கனிமொழி ஆகியோர் டில்லியில் இன்று மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனை சந்தித்தனர். தமிழகத்துக்கான நிதியை விடுவிக்கும்படி கோரிக்கை விடுத்தனர்.

இது தொடர்பாக,தங்கம் தென்னரசு பதிவிட்டுள்ளதாவது:

தமிழக முதல்வர் ஸ்டாலின் , 2025-26 ஆம் ஆண்டு நிதியாண்டில், நபார்டு வங்கியின் ஊரக உட்கட்டமைப்பு மேம்பாட்டு நிதியின் கீழ் ரூ.4,500 கோடிக்கான நிதியையும், மீன்வள உட்கட்டமைப்பு மேம்பாட்டு நிதியின் கீழ் குளச்சல் மீன்பிடித் துறைமுக விரிவாக்கத்திற்கு ரூ. 350 கோடி நிதியையும் விரைந்து வழங்கிட ஒப்புதல் அளிக்குமாறு மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அவர்களுக்குக் கடிதம் எழுதியுள்ளார்.

அந்த கடிதத்தை இன்று நிதியமைச்சரிடம் வழங்கினோம். தமிழக அரசு சார்பில் பார்லி குழுத் தலைவர் கனிமொழியுடன் இணைந்து, இன்று டில்லியில் கடிதத்தை வழங்கி, விரைவில் நிதி வழங்கிட ஏற்பாடு செய்யும்படி வேண்டுகோள் விடுத்தோம்.
இவ்வாறு அவர் பதிவிட்டுள்ளார்.


இது குறித்து முதல்வர் ஸ்டாலின் வெளியிட்ட பதிவு:
குளச்சல் துறைமுக விரிவாக்கப் பணிகளைத் தொடங்கிட வேண்டும் என குமரி மாவட்ட மீனவர்கள் என்னைச் சந்தித்து, தங்களது கோரிக்கையை முன்வைத்துள்ளனர். தமிழ்நாட்டின் இந்த நியாயமான கோரிக்கையை மத்திய நிதியமைச்சர் ஏற்றுக்கொண்டு, விரைவில் உரிய நிதியை விடுவிப்பார் என நம்புகிறேன்.
இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

Advertisement