ஜிஎஸ்டி சீர்திருத்தம்: எதிர்க்கட்சி ஆளும் மாநிலங்கள் ஒப்புக் கொண்டது எப்படி?

4


புதுடில்லி: ஜிஎஸ்டியில் மறுசீர்திருத்தம் செய்ய எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலங்கள் ஒப்புக் கொண்டது எப்படி என்பது குறித்த தகவல் வெளியாகி உள்ளது.

வலியுறுத்தல்



கடந்த சுதந்திர தினத்தன்று செங்கோட்டையில் உரையாற்றிய பிரதமர் மோடி, ஜிஎஸ்டியில் சீரமைப்பு செய்யப்படும் என அறிவித்தார். இதனையடுத்து அது குறித்த எதிர்பார்ப்புகள் கிளம்பின. ஆனால், கேரளா உள்ளிட்ட எதிர்க்கட்சி ஆளும் மாநிலங்கள் இதனால் வருவாய் இழப்பு ஏற்படும் என அச்சம் தெரிவித்ததுடன், அது குறித்து சரி செய்ய வேண்டும் எனவும் வலியுறுத்தி வந்தன.


இந்நிலையில் டில்லியில் நேற்று (செப்டம்பர் 03) நடந்த கவுன்சில் கூட்டத்தில் அனைத்து முடிவுகளும் ஒரு மனதாக எடுக்கப்பட்டதாக நிர்மலா சீதாராமன் அறிவித்து இருந்தார். ஆரம்பத்தில் எதிர்ப்பு தெரிவித்த எதிர்க்கட்சிகள் தற்போது ஒப்புக் கொண்டது என்பது குறித்த தகவல் வெளியாகி உள்ளது.

அறிவுறுத்தல்



இது தொடர்பாக தகவல் அறிந்த டில்லி வட்டாரங்கள் கூறியதாவது: ஜிஎஸ்டி குறைப்பு தொடர்பான அடிப்படை பணிகளை மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கடந்த ஆறு மாதங்களுக்கு முன்பே துவக்கி விட்டார். நடுத்தர மற்றும் ஏழை மக்களுக்கு நிவாரணம் கிடைக்க வேண்டும். எனவே முடிவு எடுப்பதில் தாமதம் கூடாது என பிரதமர் மோடி அறிவுறுத்தி இருந்தார். மறுபுறம். இதில் அரசியல் ரீதியில் எந்த பிரச்னையும் வரக்கூடாது என்பதை கவனத்தில் கொண்டு மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவும் தனியாக கூட்டம் ஒன்றை ஆலோசனை கூட்டம் ஒன்றை நடத்தினார்.

மாற்றம்



ஆனால், நேற்று ஜஎஸ்டி கவுன்சில் கூட்டம் துவங்கியதும் முடிவுகள் அனைத்தும் எளிதாக ஒரு மனதாக எடுக்கப்படவில்லை. மேற்கு வங்கம், கேரளா, கர்நாடகா ஆகிய மாநிலங்கள் தங்களுக்கான வரி குறையும் என்பதால், வரிக்குறைப்பு குறித்து கடுமையாக எதிர்ப்பு தெரிவித்தன. இதனால், இரவு 7 மணிக்கு முடிவடைய வேண்டிய கூட்டம் இரவு 9 : 30 மணி வரை நீடித்தது. ஒரு கட்டத்தில் பஞ்சாப் அரசின் நிலையிலும் மாற்றம் வந்தது.


பிடிவாதம்




மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜியும் முடிவை மாற்றிக் கொண்டார். விரைவில் சட்டசபை தேர்தல் வர உள்ளதாலும், 8 ஆண்டுக்கு முன் தான் வலியுறுத்திய கோரிக்கைகள் தற்போது உள்ளதாலும் அவரது நிலைப்பாட்டுக்கு முக்கிய காரணமாக இருந்தது.கேரளா, கர்நாடகா ஆகிய மாநிலங்கள் விடாப்பிடியாக இருந்தன. இழப்பீடு குறித்து மத்திய அரசு உத்திரவாதம் வழங்க வேண்டும் எனக்கூறியதுடன், முடிவை மறுநாளுக்கு ஒத்திவைக்க வேண்டும் எனத் தெரிவத்தன.


இருப்பினும் நிர்மலா சீதாராமன், கவுன்சில் உறுப்பினர்கள் இடையே பேசும்போது, தேவைப்பட்டால் இரவு முழுவதும் அமர்ந்து பேச தயாராக இருக்கிறேன். ஆனால் மக்களுக்கான நிவாரணம் தாமதமாகி விடக்கூடாது என்றார்.

ஓட்டெடுப்பு



இதனால் மற்ற மாநில அமைச்சர்கள் பொறுமை இழந்தனர். ஒரு கட்டத்தில் சத்தீஸ்கர் மாநில நிதியமைச்சர் ஓபி சவுத்ரி எழுந்து, ஒரு மித்த முடிவு ஏற்படவில்லை என்றால் ஏன் ஓட்டெடுப்பு நடத்தக்கூடாது ? எனக்கேள்வி எழுப்பினார்.


ஜிஎஸ்டி கவுன்சில் வரலாற்றில் லாட்டரி குறித்து ஒரு முறை தான் ஓட்டெடுப்பு நடந்தது. இதனால் இந்த முறையும் ஓட்டெடுப்பு நடக்குமா என்ற கேள்வி அங்கிருந்தவர்கள் மத்தியில் எழுந்தது.

அச்சம்



அப்போது, ஓட்டெடுப்பு தேவையா என்பது குறித்து உறுப்பினர்கள் தெளிவாக சொல்ல வேண்டும் என்றார். இதனையடுத்து, ஓட்டெடுப்பு மூலம் இதனை தடுத்து நிறுத்தினால் அரசியல் ரீதியில் பின்னடைவு ஏற்படும் என்பதால், எதிர்க்கட்சிகள் மத்தியில் பீதி ஏற்பட்டது. இதனையடுத்து, மேற்கு வங்க அமைச்சர் தலையீட்டு கேரளா மற்றும் கர்நாடக அரசுகளை சமாதானப்படுத்தினார். இதனால், அவர்களும் வழிக்கு வந்தனர். தொடர்ந்து கூட்டம் சுமூகமாக முடிய, அனைத்து முடிவுகளும் சுமூகமாக எடுக்கப்பட்டதாக மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்தார்.


கவுன்சில் உறுப்பினர்கள் இடையே பதற்றத்தை தணிக்கும் வகையில் நிர்மலா சீதாராமன் பேசியதாவது: வரி மூலம் கிடைக்கும் பணம் அனைத்தும் மத்திய அரசுக்கும், மாநில அரசுக்கும் கிடைக்கிறது. மாநிலத்துக்கு இழப்பு ஏற்பட்டால், மத்திய அரசுக்கும் இழப்பு ஏற்படும். ஆனால் இன்று மக்களுக்கு நிவாரணம் கிடைக்கும் என்றார்.


நிர்மலா சீதாராமனின் ஆறு மாத உழைப்பு மற்றும் நேற்று நடந்த நீண்ட விவாதம் மூலம் அனைத்தும் முடிவுக்கு வந்தது.

Advertisement