கள்ளக்காதல் விவகாரம் இரு பெண்களை குத்திவிட்டு தப்பிய வாலிபர் ஏரியில் குதித்து தற்கொலை இரு பெண்களை குத்திவிட்டு தப்பிய வாலிபர் ஏரியில் குதித்து தற்கொலை

சோழவரம்:கள்ளக்காதல் விவகாரத்தில், அண்ணியையும், அவரது சகோதரியையும் கத்தியால் குத்திவிட்டு தப்பிய கள்ளக்காதலன், போலீஸ் விசாரணைக்கு பயந்து, புழல் ஏரியில் குதித்து தற்கொலை செய்து கொண்டார்.

செங்குன்றம் அடுத்த கோனிமேடை சேர்ந்தவர் அஜய், 31. தனியார் மருத்துவமனையில் எக்ஸ்ரே டெக்னீஷியனாக பணிபுரிந்து வந்தார். கருத்து வேறுபாடு காரணமாக, மனைவியை பிரிந்து தனியாக வாழ்ந்து வந்தார்.

சோழவரம் அடுத்த சோலையம்மன் நகரில் உள்ள அண்ணன் வீட்டிற்கு அடிக்கடி சென்று வந்தார். அப்போது, அண்ணி தில்ஷாத்தின் சகோதரி சல்மா, 35, என்பவருடன் பழக்கம் ஏற்பட்டது. சல்மாவும், கணவரை பிரிந்து வாழ்ந்து வந்தார். அஜயும், சல்மாவும் நெருங்கி பழகி வந்தனர்.

இந்நிலையில், வேறு ஒருவருடன் சல்மா தொடர்பில் இருப்பதாக கூறப்படுகிறது.

இதனால் ஆத்திரமடைந்த அஜய், நேற்று முன்தினம் சோழவரத்தில் உள்ள சல்மாவின் வீட்டிற்கு சென்றார். இதுகுறித்து கேட்டபோது, இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.

ஆத்திரமடைந்த அஜய், கையில் வைத்திருந்த கத்தியால் சல்மாவை குத்தினார். தடுக்க வந்த அண்ணி தில்ஷாத்தையும் குத்திவிட்டு தப்பினார். அலறல் சத்தம் கேட்டு வந்த அக்கம்பக்கத்தினர், இருவரையும் மீட்டு, ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.

இதுகுறித்து, சோழவரம் போலீசார் வழக்கு பதிந்து, அஜயை தேடி வந்தனர். அவர், புழல் ஏரியில் சடலமாக மிதந்தார். போலீசாரின் விசாரணைக்கு பயந்து, புழல் ஏரியில் குதித்து, அஜய் தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது. இதுகுறித்து, சோழவரம் மற்றும் செங்குன்றம் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

Advertisement