4 மாவட்டங்களில் இன்று கன மழை

சென்னை: 'தமிழகத்தில் தேனி, திண்டுக்கல், மதுரை, சிவகங்கை மாவட்டங்களில் சில இடங்களில் இன்று கன மழை பெய்ய வாய்ப்புள்ளது' என, சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
அதன் அறிக்கை:
நேற்று காலை வரையிலான 24 மணி நேரத்தில், விழுப்புரம் மாவட்டம் செஞ்சி, சிவகங்கை மாவட்டம் திருப்புவனத்தில் அதிகபட்சமாக தலா, 10 செ.மீ., மழை பெய்துள்ளது.
இதற்கு அடுத்தபடியாக, விழுப்புரம் மாவட்டம் வல்லம், சென்னை மணலி புதுநகரில் தலா, 9; விழுப்புரம் மாவட்டம் ஆனந்தபுரம், பெரம்பலுார் மாவட்டம் செட்டிகுளம், திருச்சி மாவட்டம் வத்தலை அணைக்கட்டு பகுதிகளில் தலா, 7; சேலம் மாவட்டம் ஏற்காட்டில், 6 செ.மீ., மழை பதிவாகி உள்ளது.
தமிழகம் உட்பட தென் மாவட்டங்களின் மேல், ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது.
இதன் காரணமாக, தமிழகத்தில் ஒரு சில இடங்கள், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதியில் இன்றும், நாளையும் இடி, மின்னலுடன் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது.
தேனி, திண்டுக்கல், மதுரை, சிவகங்கை மாவட்டங்களில், ஒரு சில இடங்களில் இன்று கன மழை பெய்யலாம்.
திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, தேனி, திண்டுக்கல், மதுரை, சிவகங்கை மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் நாளை கன மழை பெய்ய வாய்ப்புள்ளது.
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இன்று வானம் ஓரளவு மேக மூட்டமாக காணப்படும்; சில இடங்களில் லேசான மழை பெய்யலாம்.
தமிழக தென் மாவட்டங்களின் கடலோர பகுதிகள், அதை ஒட்டிய குமரிக்கடல் மற்றும் மன்னார் வளைகுடா பகுதிகள் போன்றவற்றில் இன்றும், நாளையும், மணிக்கு 40 முதல், 50 கி.மீ., வேகத்திலும், இடையிடையே மணிக்கு 60 கி.மீ., வேகத்திலும் சூறாவளிக்காற்று வீசக்கூடும்.
எனவே, மீனவர்கள் இப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
