இரண்டு மணி நேரம் கொட்டித் தீர்த்த மழை

மதுரை : தொடர்ந்து வெயிலின் தாக்கத்தால் அவதிப்பட்ட மதுரை மக்களை மகிழ்விக்கும் வகையில் பல்வேறு இடங்களில் நேற்று மதியம் 3:30 முதல் மாலை 5:30 மணி வரை இடை விடாமல் மழை பெய்தது. கலெக்டர் பங்களாவில் இருந்த மரம் வேரோடு பெயர்ந்து விழுந்தது.

ரோடு ஸ்தம்பித்தது வழக்கமாகவே சிம்மக்கல் முதல் கோரிப்பாளையம் வரையும் தல்லாகுளத்தில் இருந்து சிம்மக்கல் வரையும் கோரிப்பாளையம் சிக்னலில் வாகனங்கள் நீண்ட வரிசையில் காத் திருந்தே செல்ல முடியும்.

அமெரிக்கன் கல்லுாரி பகுதியில் சாலைப்பணி நடப்பதால் நேற்று பெய்த மழையால் வாகனங்கள் பள்ளம் மேடு தெரியாமல் ஒரு கி.மீ., துாரத்திற்கு நின்றன. வைகை வடகரை, தென்கரை ரோடுகளில் தண்ணீர் ஓரடி ஆழம் வரை தேங்கி நின்றதால் வாகனங்கள் ஊர்ந்து சென்றன.

மீனாட்சியம்மன் கோயில் அம்மன் சன்னதி பகுதியில் தண்ணீர் தேங்கி நின்றது. மணிநகரம் கர்டர் பாலத்தின் சுரங்கப் பகுதியில் மழைநீர் நிறைந்ததால் வாகனங்கள் மாற்றுப் பாதையில் சென்றன. கலெக்டர் பங்களா வாசலில் இருந்த மரம் விழுந்தது.

மரத்தை அகற்றுவதற்காக சென்ற தீயணைப்பு வாகனம் போக்குவரத்து நெருக்கடியில் சிக்கி அரைமணி நேர போராட்டத்திற்கு பின் கலெக்டர் பங்களா சென்றது. கலெக்டர் அலுவலகம் இருளில் மூழ்கியது. கீழவாசல் லட்சுமி பு ரம் 7வது கிராஸ் ரோட்டில் உள்ள வீடுகளுக்குள்ளும் மழைநீர் புகுந்தது.

மதுரை சூர்யாநகர் மீனாட்சி அம்மன் நகர் மெயின் ரோட்டில் பாதாள சாக்கடைக்காக பள்ளம் தோண்டப்பட்டு முழுமையாக மூடவில்லை. நேற்று பெய்த மழையில் பள்ளத்தில் தண்ணீர் தேங்கியதால் மாணவர்களுடன் வந்த தனியார் பள்ளி வேனின் சக்கரம் பள்ளத்தில் சிக்கி புதைந்தது. இதனால் மாணவர்கள் மழைத் துாறலிலும் வேனில் இறங்கி வீடு களுக்கு சென்றனர்.

காளவாசல், அரசரடி, தமிழ்ச்சங்கம் ரோடுகளில் ஓரடி ஆழத்திற்கு மழை நீர் தேங்கியது. இரண்டு மணி நேர இடைவிடாத மழையால் மதுரையே குளிர்ந்தது.

Advertisement