ஈரானில் சாபகார் துறைமுக மேம்பாட்டு திட்டம்: தடை விதிக்க அமெரிக்கா முடிவு

20


வாஷிங்டன்: ஈரான் சாபகார் துறைமுகத்தில் இந்தியா உள்ளிட்ட பிற நாடுகளுக்கான பொருளாதார தடை விலக்குகளை ரத்து செய்ய அமெரிக்கா முடிவு செய்துள்ளது. இது, இந்தியாவுக்கு பெரும் சிக்கலை ஏற்படுத்தியுள்ளது.

அணு ஆயுதத்தடை ஒப்பந்தத்தை மீறியதற்காக ஈரான் மீது கடந்த 2018ம் ஆண்டு அமெரிக்கா பொருளாதார தடைகளை விதித்தது. கடந்த 2024ல் சாபகார் துறைமுகத்தை இயக்குவது தொடர்பாக இந்தியா, ஈரானுடன் 10 ஆண்டுகள் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளது. இதன் காரணமாக, ரூ.1,000 கோடி முதலீடு செய்ததுடன், ரூ.2,000 கோடிக்கு அதிகமான செலவில் துறைமுகத்தை சுற்றிலும் கட்டமைப்புகளை இந்தியா உருவாக்கியுள்ளது.

திட்டம் தொடங்கிய காலத்தில் இந்தியா- அமெரிக்கா இடையே நல்லுறவு இருந்தது. இதனால் ஈரான் துறைமுகத்தை மேம்படுத்தும் திட்டத்தை அமெரிக்கா தடுக்கவில்லை. ஈரானுக்கு எதிரான தடையில் இருந்து இந்தியாவுக்கு அமெரிக்கா முழு விலக்கு அளித்திருந்தது.


இந்த நிலையில், ஈரானுக்கு எதிரான தடை விலக்குகளை ரத்து செய்ய அமெரிக்கா முடிவு செய்துள்ளது. வரும் செப்.,29ம் தேதி முதல் இந்தத் தடை விலக்குகளை ரத்து செய்வதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அமெரிக்காவின் இந்த முடிவினால், இந்தியாவின் முதலீடு மற்றும் துறைமுகத்துடன் தொடர்புடைய நிறுவனங்களைப் பாதிக்கும்.

சாபகார் துறைமுகமானது பாகிஸ்தானைத் தவிர்த்து ஆப்கானிஸ்தான் மற்றும் மத்திய ஆசிய நாடுகளுக்கான வர்த்தக வழியை வழங்குகிறது. இது இந்தியா, ரஷ்யா, ஐரோப்பிய நாடுகளை இணைக்கும் சர்வதேச வழித்தடமாகும்.

இது தொடர்பாக அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், "ஈரான் அரசை தனிமைப்படுத்தும் அதிபர் டிரம்பின் அதிகப்படியான அழுத்தக் கொள்கைக்கு இணங்கவே இந்த முடிவு எடுக்கப்பட்டது. இந்த விலக்கு நடைமுறைக்கு வந்த பிறகு, சாபகார் துறைமுகத்தை இயக்குபவர்கள் ஈரான் சுதந்திரம் மற்றும் எதிர் பரவல் சட்டத்தின் கீழ் தடைகளுக்கு உட்படுத்தப்படலாம். ஈரான் அரசு மற்றும் அதன் ராணுவ நடவடிக்கைகளைத் தக்கவைக்கும் சட்டவிரோத நிதி வலையமைப்புகளைச் சீர்குலைப்பதற்கான நடவடிக்கையாகும்," என்று தெரிவித்துள்ளது.

அமெரிக்காவின் இந்த முடிவு இந்தியாவின் வர்த்தக திட்டங்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் அபாயத்தை உண்டாக்கியுள்ளது.

Advertisement