அமெரிக்காவில் எச்-1பி விசாவில் பணியாளர்களை நியமித்தோருக்கு அவசர நிலை

வாஷிங்டன் : அமெரிக்காவுக்கான 'எச்1பி' விசா கட்டணத்தை 1 லட்சம் அமெரிக்க டாலராக, அதாவது இந்திய மதிப்பில் 88 லட்சம் ரூபாயாக உயர்த்தும் நிர்வாக உத்தரவில், அந்த நாட்டின் அதிபர் டொனால்டு டிரம்ப் கையெழுத்திட்டார். இது, இந்தியர்களை பணி அமர்த்திய நிறுவனங்களுக்கு அவசரநிலையை ஏற்படுத்தியுள்ளது. இது, அங்கு செல்ல திட்டமிட்டுள்ள மற்றும் விடுமுறைக்கு சென்றுள்ள இந்தியர்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.
அமெரிக்காவில் இன்ஜினியரிங், கம்ப்யூட்டர் மென்பொருள் உள்ளிட்ட திறன் வாய்ந்த துறைகளுக்கு தேவையானவர்கள் கிடைக்காத நிலையில், 1990களில் அறிமுகம் செய்யப்பட்டது தான், எச்1பி விசா முறை. இதன்படி, இந்தியா, சீனா உட்பட வெளிநாடுகளில் இருந்து திறன் வாய்ந்தவர்கள் வேலைக்கு கிடைத்தனர்.
இவ்வாறு குறிப்பிட்ட காலம் தங்கியிருந்து வேலை பார்த்த வெளிநாட்டவருக்கு, 'கிரீன் கார்டு' எனப்படும் நிரந்தர குடியிருக்கும் உரிமை கிடைக்கும். சாதாரணமாக எச்1பி விசா என்பது முதலில் மூன்று ஆண்டுகளுக்கு வழங்கப்படும்; அதன்பின், ஆறு ஆண்டுகள் வரை நீட்டிக்கப்படும். அதே நேரத்தில் கிரீன் கார்டு பெற்றவர்கள் வாழ்நாள் முழுதும் புதுப்பித்துக் கொள்ளலாம். தற்போதைய நிலையில், கிரீன் கார்டுக்காக நீண்ட காலம் காத்திருக்க வேண்டியுள்ளது.
இந்நிலையில், இந்த ஆண்டு ஜனவரியில் அமெரிக்க அதிபராக பதவியேற்ற டிரம்ப், குடியேற்ற நடைமுறைகளில் பெரிய அளவில் மாற்றங்களை ஏற்படுத்தினார்.
சட்டவிரோதமாக தங்கியுள்ள வெளிநாட்டவரை, அவர்களுடைய நாட்டுக்கே திருப்பி அனுப்புவது போன்றவை அதில் ஒன்றாகும். இதை தவிர, விசா வழங்கும் நடைமுறைகளில் கடுமையான நிபந்தனைகள், கட்டுப்பாடுகளை டிரம்ப் விதித்தார்.
அரசுக்கு எதிராக சமூக வலைதளங்களில் பதிவிடுவது போன்ற காரணங்களை கூறி, வெளிநாட்டு மாணவர்கள், தொழிலாளர்களை வெளியேற்றும் நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டன.இந்நிலையில், கிரீன் கார்டு உள்ளிட்ட ஏற்கனவே உள்ள நடைமுறைகள் மோசடி என, அதிபர் டொனால்டு டிரம்ப் கூறி வருகிறார்.
இது குறைந்த ஊதியம், குறைந்த திறன் கொண்ட பணியாளர்களை நிரப்புவதற்காக வேண்டுமென்றே உள்நோக்கத்துடன் தவறாக பயன்படுத்தி, அமெரிக்கர்களின் பணி வாய்ப்புகள் சுரண்டப்பட்டு வருவதாக டிரம்ப் நிர்வாகம் தொடர்ந்து கூறி வருகிறது.
இந்நிலையில், புதிய உத் தரவு ஒன்றை அதிபர் டிரம்ப் நேற்று பிறப்பித்துள்ளார். அதாவது, எச்1பி விசாவுக்கான கட்டணத்தை, 1 லட்சம் டாலராக, அதாவது 88 லட்சம் ரூபாயாக உயர்த்தி அவர் உத்தரவிட்டுள்ளார் .இந்த உத்தரவு, இந்திய தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களை குறி வைத்து எடுக்கப்பட்ட தாகக் கூறப்படுகிறது.
இதற்கு முக்கிய காரணம், எச்1பி அதிகம் பயன்படுத்தும் நாடாக இந்தியா உள்ளது. அதிலும், தகவல் தொழில்நுட்பத் துறையே முன்னிலையில் உள்ளது. தற்போதைய நிலையில், இந்த புதிய கட்டண உயர்வு, புதிய விசாக்களுக்கும், புதுப்பித்தலுக்கும் பொருந்தும். அதே நேரத்தில் சொந்த நாட்டுக்கு விடுமுறையில் சென்று மீண்டும் வரும்போது, அமெரிக்க குடியேற்றத் துறையின் அனுமதி தேவைப்படுவோருக்கும் இந்தக் கட்டணம் பொருந்தும் .
அமெரிக்காவின் எச்1பி விசா பெறுவதில் இந்தியர்களே முன்னிலையில் உள்ளனர். கடந்தாண்டு வழங்கப்பட்ட விசாக்களில், 71 சதவீதம் இந்தியர்களே பெற்றனர். அதற்கடுத்து, நம் அண்டை நாடான சீனாவைச் சேர்ந்தவர்கள், 11.7 சதவீதம் பெற்றனர். இந்த விசா கட்டண உயர்வைத் தவிர, எச்1பி விசா வைத்துள்ளோருக்கு, அமெரிக்கர்களுக்கு வழங்கப்படும் அளவுக்கு சம்பளம் வழங்கப்படுகிறதா என்பதை ஆய்வு செய்யவும் தொழிலாளர் துறைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. இந்த உத்தரவுகள், இந்தியர்களை அதிகளவில் வேலைக்கு அமர்த்தும் அமெரிக்க நிறுவனங்கள் மற்றும் அங்கு செயல்படும் இந்திய நிறுவனங்களுக்கு, ஒரு அவசர நிலையை உருவாக்கியுள்ளது.
இந்த உத்தரவுகள், 21ம் தேதி முதல் அமலுக்கு வரும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து, விடுமுறையில் சென்றவர்கள் உள்ளிட்டோரை, 24 மணி நேரத்திற்குள் நாடு திரும்பும்படி நிறுவனங்கள் நேற்று அறிவித்தன.
நாடு திரும்ப உத்தரவு!
அமெரிக்க அதிபர் டிரம்பின் விசா நடவடிக்கையை அடுத்து, 'மெட்டா, மைக்ரோசாப்ட்' போன்ற முக்கிய நிறுவனங்கள் தங்கள் பணி யாளர்களுக்கு சில அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளன.
இதில், எச்1பி விசா வைத்துள்ள தங்கள் பணியாளர்கள் அனைவரும் குறைந்தது 14 நாட்களுக்கு அமெரிக்காவை விட்டு வெளியேற வேண்டாம் என வலியுறுத்தி உள்ளன.
தற்போது அமெரிக்காவுக்கு வெளியில் இருக்கும் தங்கள் பணியாளர்கள் மீண்டும் நுழைய மறுக்கப்படுவதை தவிர்க்க, 24 மணி நேரத்திற்குள் நாட்டிற்கு திரும்புமாறு கேட்டுக் கொண்டுள்ளன.
காங்கிரஸ் கிண்டல்!
இந்த விவகாரம் தொடர்பாக காங்கிரசைச் சேர்ந்த லோக்சபா எதிர்க்கட்சித் தலைவர் ராகுல், சமூக வலைதளத்தில், 'நான் மீண்டும் சொல்கிறேன்; இந்தியா ஒரு பலவீனமான பிரதமரை கொண்டுள்ளது' என பதிவிட்டுள்ளார்.
காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே கூறியுள்ளதாவது:
வெற்று கோஷங்கள், இசை நிகழ்ச்சிகள், மோடி மோடி என்று மக்களை கோஷமிட வைப்பது நம் வெளியுறவு கொள்கை அல்ல. வெளியுறவு கொள்கை என்பது நம் தேசிய நலன்களை பாதுகாப்பது; இந்தியாவை முதன்மையாக வைத்திருப்பது மற்றும் ஞானத்துடன் சமநிலையுடன் நட்பை வழிநடத்துவது பற்றியதாகும்.இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
இந்திய நிறுவனங்கள் அள்ளின!
நடப்பாண்டில் ஜூன் 30ம் தேதி வழங்கப்பட்ட விசாக்களில் 13 சதவீதத்தை, இந்திய தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களே பெற்றுள்ளன.
இதில், டி.சி.எஸ்., எனப்படும் டாடா கன்சல்டன்சி சர்வீசஸ் முதலிடத்தில் உள்ளது.டி.சி.எஸ்., 5,505; இன்போசிஸ் 2,004; எல்.டி.ஐ., மைண்டுட்ரீ 1,807; எச்.சி.எல்., அமெரிக்கா 1,728; விப்ரோ- 1,523; டெக் மஹிந்திரா அமெரிக்காஸ்- 951; எல் அண்டு டி டெக்னாலஜி சர்வீசஸ்- 352 பெற்றுள்ளன.
இருப்பினும், கடந்த 2024 செப்டம்பர் வரை இந்திய நிறுவனங்கள் பெற்ற எச்1பி விசாக்களின் எண்ணிக்கையான 24,766 உடன் ஒப்பிடுகையில், தற்போது 13,870 ஆக கணிசமாகக் குறைந்துள்ளது.
அமெரிக்காவுக்கே பாதிப்பு!
நிடி ஆயோக் அமைப்பின் முன்னாள் தலைமை நிர்வாக அதிகாரி அமிதாப் காந்த் கூறியுள்ளதாவது:
அமெரிக்க அதிபர் டிரம்பின் எச்1பி விசா கட்டண உயர்வால், இந்தியாவுக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படப் போவதில்லை. மாறாக, அமெரிக்காவின் கண்டுபிடிப்புகளை தான் முடக்கும்.
இந்த கட்டண உயர்வின் காரணமாக, இந்தியாவின் சிறந்த மருத்துவர்கள், பொறியாளர்கள், விஞ்ஞானிகள் மற்றும் கண்டுபிடிப்பாளர்கள் இந்தியாவின் வளர்ச்சிக்கும், வளர்ந்த பாரதத்தை நோக்கிய நம் முன்னேற்றத்திற்கும் பங்களிக்க வாய்ப்புள்ளது. அமெரிக்காவின் இழப்பு, இந்தியாவுக்கான லாபமாக இருக்கும்.
அமெரிக்காவின் முடிவால் ஆய்வகங்கள், காப்புரிமைகள், புதுமை மற்றும் ஸ்டார்ட் அப் நிறுவனங்களின் உலகளாவிய திறமையாளர்களுக்கான வாய்ப்புகள், இந்தியாவின் பெங்களூரு, ஹைதராபாத், புனே மற்றும் குர்கானுக்கு இடம் பெயர வாய்ப்புள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.
மேலும்
-
3 ஆண்டுகளுக்கான கலைமாமணி விருது அறிவித்தது தமிழக அரசு: பாடகர் யேசுதாஸுக்கு எம்.எஸ்.சுப்புலட்சுமி விருது
-
தங்கம் விலை சவரனுக்கு ரூ.320 குறைவு
-
இந்தியா நெருங்கிய கூட்டாளி; வரி விதித்தது குறித்து ஐநா சபையில் அமெரிக்க அமைச்சர் பேச்சு
-
காரீப் பயிற்சி
-
எச்1பி விசாவில் அடுத்த மாற்றம்
-
ட்ரோன்கள் பறந்ததால் பதற்றம் விமான நிலையங்கள் மூடப்பட்டன