ஜி.எஸ்.டி., வரியயை திருப்பி தருவீர்களா? மோடிக்கு சித்தராமையா கேள்வி

மைசூரு: ''ஜி.எஸ்.டி.,யை பிரதமர் நரேந்திர மோடி அமல்படுத்தி அதிகப்படியான வரியை வசூலித்தார். இப்போது குறைத்துக் கொண்டு, பெருமை பேசுகிறார்,'' என, முதல்வர் சித்தராமையா தெரிவித்தார்.

மைசூரில் நேற்று அவர் அளித்த பேட்டி:

எட்டு ஆண்டுகளுக்கு முன்பு ஜி.எஸ்.டி., எனும் சரக்கு சேவை வரியை பிரதமர் மோடி அமல்படுத்தினார். 18 முதல் 28 சதவீதம் வரை வரி வசூலித்தார். இப்போது நல்ல பிள்ளை போன்று, 'வரி குறைக்கப்படுகிறது' என்கிறார். இத்தனை ஆண்டுகள் வாங்கிய அதிகப்படியான வரி தொகையை திருப்பி தருவீர்களா?

ஜி.எஸ்.டி., அதிகரித்தபோது எதிர்த்தது எங்கள் கட்சி தான். பல ஆண்டுகளாக வரியை வசூலித்தவர்கள், இப்போது குறைத்துவிட்டோம் என்று பெருமை பேசுகின்றனர். நாட்டு மக்கள் தலையில் எவ்வளவு தந்திரமாக 'குல்லா' போடுகின்றனர் பார்த்தீர்களா?

ஏழைகள் வெறும் வயிற்றில் உறங்கக் கூடாது என்பதற்காக, 'அன்னபாக்யா' திட்டத்தில் 10 கிலோ அரிசி இலவசமாக வழங்கி வருகிறோம்.

தசராவை பானு முஷ்டாக் துவக்கி வைப்பதற்கு எதிர்ப்புத் தெரிவித்து, கர்நாடக உயர் நீதிமன்றத்திலும், உச்ச நீதிமன்றத்திலும் வழக்கு தொடர்ந்தனர். அவர்களுக்கு நீதிமன்றங்கள் சாட்டையடி கொடுத்துள்ளது.

பானு முஷ்டாக்கை எதிர்த்தவர், இரண்டு முறை எம்.பி.,யாக இருந்துள்ளார். இவருக்கு தசரா என்றால் என்னவென்றே தெரியாது. என்னை ஹிந்து விரோதியாக சித்தரிக்க முயற்சித்து தோல்வி அடைந்தனர். அவர்களை விட நான் சிறந்த ஹிந்து.

இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement