நவராத்திரி முதல் நாளில் 30 ஆயிரம் மாருதி கார் விற்பனை: ஹூண்டாய் 11 ஆயிரம், டாடா மோட்டார்ஸ் 10 ஆயிரம் கார் விற்பனை

8

புதுடில்லி: ஜி.எஸ்.டி., வரிக்குறைப்பு எதிரொலியாக வாகன விற்பனை அதிகரித்துள்ளது. நவராத்திரி முதல் நாளான நேற்று, டாடா மோட்டார்ஸ் நிறுவனம், 10 ஆயிரம் கார்கள் டெலிவரி வழங்கியுள்ளது. அதேபோல் முதல் நாளில் 30 ஆயிரம் கார்கள் விற்பனை ஆனதாக மாருதி நிறுவனம் தெரிவித்துள்ளது. இது கடந்த 35 ஆண்டுகளில் இல்லாத அதிகபட்ச ஒரு நாள் விற்பனை என்று அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது.


மத்திய அரசு, ஜி.எஸ்.டி., வரி விகிதங்களை மாற்றி அமைத்துள்ளதால், கார்கள், பைக், வீட்டு உபயோகப்பொருட்கள், உணவு மற்றும் மருந்துப்பொருட்கள் என அனைத்து பொருட்களின் விலையும் சரிந்துள்ளது. அதிலும் குறிப்பாக, வாகனங்களின் விலை, கணிசமாக குறைந்துள்ளது. ஒவ்வொரு கார் உற்பத்தி நிறுவனமும், தங்கள் விலைக்குறைப்பு பட்டியலை வெளியிட்டு வாடிக்கையாளர்களை கவர்ந்து வருகின்றனர்.

விலைக்குறைப்பு அமலுக்கு வந்த செப்.,22ம் தேதி (நேற்று) மட்டும் டாடா மோட்டார்ஸ் நிறுவனம் 10 ஆயிரம் கார்களை டெலிவரி வழங்கியுள்ளது. இது மட்டுமின்றி, 25 ஆயிரம் பேர், புதிய கார் வாங்க விசாரித்துள்ளதாகவும் தெரிவித்துள்ளது.



புதிய கார் விற்பனை மட்டுமின்றி, பழைய கார்களின் விற்பனையும் களை கட்டியுள்ளது. கார்ஸ்24 என்ற பழைய கார் விற்பனை நிறுவனம், வர்த்தக விசாரணை பன்மடங்கு அதிகரித்துள்ளதாகவும், 5 ஆயிரம் பேர் கார் வாங்க நேரில் பார்வையிட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளது.


அதேபோல் நவராத்திரி முதல் நாளான நேற்று மட்டும் 30 ஆயிரம் கார்கள் விற்பனை செய்யப்பட்டு உள்ளதாக மாருதி நிறுவனம் அறிவித்துள்ளது. இது கடந்த 35 ஆண்டு கால வரலாற்றில் இல்லாத அதிகபட்ச ஒரு நாள் விற்பனை என்று மாருதி நிறுவனம் அறிவித்துள்ளது. இது மட்டும் இன்றி நேற்று ஒரு நாளில் மட்டும் 80 ஆயிரம் பேர் புதிய கார் வாங்குவதற்காக தங்களிடம் விசாரித்துச் சென்றுள்ளதாக மாருதி நிறுவனம் தெரிவித்துள்ளது.

ஹூண்டாய் நிறுவனம் 11 ஆயிரம் கார்களை நேற்று விற்பனை செய்துள்ளது.இது கடந்த ஐந்தாண்டுகளில் இல்லாத அதிகபட்ச ஒரு நாள் விற்பனை என்று அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது.

Advertisement