இதை செய்தால் மட்டுமே நோபல் பரிசு: டிரம்புக்கு சொல்கிறார் பிரான்ஸ் அதிபர் மேக்ரோன்

14


நியூயார்க்: ''காசா போரை முடிவுக்கு கொண்டு வந்தால் தான் அமெரிக்க அதிபர் நோபல் பரிசு வெல்ல முடியும்'' என பிரான்ஸ் அதிபர் இமானுவேல் மேக்ரோன் தெரிவித்து உள்ளார்.


உலக நாடுகள் இடையே 7 போர்களை நிறுத்தியவன், இந்தியா-பாக். மோதலும் என்னால் தான் தீர்த்து வைக்கப்பட்டது என்று விடாமல் டிரம்ப் பேசி வருகிறார். அவரின் கூற்றை இந்தியா முற்றிலும் நிராகரித்துள்ளது. அதுமட்டுமின்றி 7 போர்களை நிறுத்திய எனக்கு நோபல் பரிசு தந்தே ஆக வேண்டும் என டிரம்ப் தனது ஆசையை வெளிப்படையாகவே பேசி இருக்கிறார்.

இது தொடர்பாக, பிரான்ஸ் அதிபர் இமானுவேல் மேக்ராேன் கூறியதாவது:
காசா மோதலை முடிவுக்கு கொண்டு வந்தால் மட்டுமே டிரம்ப் அமைதிக்கான நோபல் பரிசை வெல்ல முடியும். இஸ்ரேலுக்கு அழுத்தம் கொடுக்கும் அதிகாரம் அமெரிக்காவுக்கு மட்டுமே உள்ளது. தற்போதைய சூழ்நிலையில் ஏதாவது செய்யக்கூடிய ஒரே ஒரு நபராக அமெரிக்க அதிபர் இருக்கிறார்.



காசாவில் இஸ்ரேல் அரசு தனது ராணுவ நடவடிக்கைகளை நிறுத்த, அமெரிக்கா அழுத்தம் கொடுக்க வேண்டும். அமெரிக்கா இஸ்ரேல் மீது அதிக செல்வாக்கை கொண்டுள்ளது. அமெரிக்க அதிபர் ஏன் நம்மை விட அதிகமாக செய்ய முடியும்? காசா மோதலை நடத்த அனுமதிக்கும் ஆயுதங்களை இஸ்ரேலுக்கு நாங்கள் வழங்குவதில்லை.


பாலஸ்தீன அரசை நிறுவுவது இறுதியில் இஸ்ரேலின் அங்கீகாரத்தை பொறுத்தது. இஸ்ரேல் அரசு அதை அங்கீகரிக்கும் நாளில் பாலஸ்தீன அரசு உண்மையிலேயே உருவாக்கப்படும். நாங்கள் ஒருபோதும் செயலற்றவர்களாக இருக்க மாட்டோம். எப்போதும் பிரான்சின் நலன்களை பாதுகாப்போம். இவ்வாறு மேக்ரோன் கூறினார்.

Advertisement