தலைமை நீதிபதி கவாயை தாக்க முயற்சி; சுப்ரீம் கோர்ட்டில் பரபரப்பு

16

புதுடில்லி: டில்லியில் சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதி கவாயை வழக்கறிஞர் ஒருவர் தாக்க முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது. அந்த வழக்கறிஞரை பாதுகாவலர்கள் வெளியேற்றினர்.


சுப்ரீம்கோர்ட் தலைமை நீதிபதியாக கவாய் பதவி வகித்து வருகிறார். இவரை இன்று (அக் 06) மத்திய பிரதேசத்தில் கஜூராகோ கோவிலில் தலை இல்லாத சிலையை மாற்றக்கோரிய,
வழக்கு விசாரணையின் போது வழக்கறிஞர் ஒருவர் தாக்க முயன்றார்.



அதுமட்டுமின்றி அந்த வழக்கறிஞர் கவாய் இருக்கைக்கு அருகே சென்று காலணியை வீச முயன்றார். பின்னர் அந்த வழக்கறிஞரை சுப்ரீம் கோர்ட்டில் இருந்த பாதுகாவலர்கள் வெளியேற்றினர்.

அப்போது அந்த வழக்கறிஞர் கூச்சலிட்டவாறே வெளியே சென்றார். வழக்கு விசாரணையின் போது, ''சிலை மாற்றியமைப்பதற்கு கடவுளிடமே கேட்டுக் கொள்ளுங்கள்'' என தலைமைநீதிபதி கவாய் கூறியிருந்தார்.


அப்போது தலைமை நீதிபதி கவாய், எந்த தயக்கமும் இல்லாமல், நீதிமன்றத்தில் இருந்த வழக்கறிஞர்களை தங்கள் வாதங்களை தொடருமாறு கேட்டு கொண்டார். ''இதற்கெல்லாம் கவனம் சிதற தேவையில்லை. நாங்கள் கவனம் சிதறவில்லை. இதனால் எனக்கு எந்த பாதிப்பும் இல்லை'' என தலைமை நீதிபதி கவாய் தெரிவித்தார்.


அனைத்து மதங்களையும் மதிப்பவன் நான் என்று தலைமை நீதிபதி கவாய் கூறினார். தலைமை நீதிபதி கவாய் மீது காலணி வீச முயன்ற வழக்கறிஞர் ராகேஷ் கிஷோரிடம் விசாரணை நடந்து வருகிறது. சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதியை தாக்க முயன்ற சம்பவம் பரபரப்பை கிளப்பி உள்ளது.

Advertisement