தமிழகம் உலகின் உதிரிபாக உற்பத்தி மையமாக மாறும்!

1

ஜே.கே., டயர்ஸ் நிறுவனத்திற்கு தமிழகம் எவ்வளவு முக்கியம்?

எங்கள் நிறுவனம், உலக அளவில் ஆண்டுக்கு 3.5 கோடி டயர்களை உற்பத்தி செய்கிறது. இதில் 20 சதவீத டயர்கள் தமிழகத்தின் ஸ்ரீபெரும்புதூர் ஆலையில் உற்பத்தியாகின்றன. வெறும் 17 மாதங்களில் இந்த ஆலை கட்டமைக்கப்பட்டு, 2012ம் ஆண்டில் துவங்கப்பட்டது. இதுவரை தமிழகத்தில், 2,600 கோடி ரூபாய் முதலீடு செய்துள்ளோம். இந்த ஆலையில் ஒரு நாளைக்கு 350 டன் டயர்கள் உற்பத்தி செய்யப் படுகின்றன. வரும் காலத்தில், இதை 600 டன்னாக அதிகரிக்கத் திட்டமிடப்பட்டுள்ளது. 80 சதவீதம் பசுமை பொருட்களால் ஆன டயர்கள், பஞ்சர் கார்டு டயர்கள், சென்சார்கள் உள்ள ஸ்மார்ட் டயர்கள் என பல நவீன கார் டயர்களை உற்பத்தி செய்து வருகிறோம்.

ஜி.எஸ்.டி., குறைப்பு குறித்து உங்களின் கருத்து?

மத்திய அரசின் இந்த முடிவு, வாடிக்கையாளர்களிடம் பணப்புழக்கத்தை அதிகரித்துள்ளது. இது, வாகன தேவையை அதிகரிக்கும். சரியாக பண்டிகை கால துவக்கத்தில், ஜி.எஸ்.டி., மாற்றம் செய்யப்படுவதால், எதிர்வரும் தேவையை உணர்ந்து, முன்கூட்டியே திட்டமிட்டு டயர் இருப்பை அதிகப்படுத்தி உள்ளோம்.

என்னென்ன பயன்பாடுகளுக்கு டயர் உற்பத்தி செய்யப்படுகின்றன?


2.5 கிலோ முதல் 3.5 டன் எடை உள்ள டயர்கள் வரை உற்பத்தி செய்கிறோம். இருசக்கர, மூன்று சக்கர வாகனங்கள், பயணியர் கார், ரேஸ் கார், வர்த்தக வாகனம், டிராக்டர்கள், சுரங்க டிப்பர்கள், ராணுவ வாகனங்கள் வரை பல்வேறு பிரிவுகளில் டயர்கள் உற்பத்தி செய்யப் படுகின்றன. 180 டன் சுரங்க டிப்பர்களில், 12 அடி உயரமுள்ள 3.5 டன் டயர் பயன்படுத்தப்படும்.

இந்தியாவில் இருந்து எந்தெந்த நாடுகளுக்கு டயர்கள் ஏற்றுமதி செய்யப்படுகின்றன?

ஐக்கிய அரபு அமீரகம், ஐரோப்பா, பிரிட்டன், மெக்சிக்கோ, லத்தீன் அமெரிக்கா, பிரேசில் ஆகிய நாடுகளுக்கு டயர்களை ஏற்றுமதி செய்து வருகிறோம். குறிப்பாக, ஐரோப்பா, பிரிட்டன் சந்தைகளில் லாரி ரேடியல் டயர் ஏற்றுமதியில் நாங்கள் முன்னிலை வகிக்கிறோம். ஐரோப்பிய சந்தைக்கு, பிரத்யேகமான பயணியர் கார் டயர்களை உருவாக்கி வருகிறோம். ஆப்பிரிக்கா மற்றும் இதர ஆசிய சந்தைகளுக்கு ஏற்றுமதி செய்ய திட்டமிட்டுள் ளோம்.

உள்நாட்டு டயர் உற்பத்தியில், 40% டயர்கள் தமிழகத்தில் உற்பத்தி ஆகின்றன, இதனால் என்ன நன்மைகள்?

சர்வதேச மற்றும் உள்நாட்டு நிறுவனங்களை ஈர்க்க, தமிழகத்தில் சரியான திறன் மற்றும் அதிக மனித வளம் உள்ளது. நல்ல சில்லறை வணிக சந்தையாக திகழும் இந்த மாநிலம், வலுவான தகவல் தொழில்நுட்ப உள்கட்டமைப்பை கொண்டு விளங்குகிறது. இங்கு பல தளவாட நிறுவனங்கள் இருப்பதால், அவர்களிடம் இருந்து சிறந்த வணிக வாய்ப்பு பெற முடிகிறது. வாகனத் துறையை சார்ந்த நிறுவனங்களுக்கு தமிழக அரசின் கொள்கைகள் மற்றும் மானிய திட்டங்கள் ஆதரவாக உள்ளன. இதனால், தமிழகம் உலகின் உதிரிபாக உற்பத்தி மையமாகும்.

@block_B@ அனுஷ்மன் ஷிங்கன்யா நிர்வாக இயக்குனர், ஜே.கே., டயர்ஸ்block_B

Advertisement