ஆந்திராவில் ரூ.13,430 கோடி திட்டங்களை தொடங்கி வைத்தார் பிரதமர் மோடி!

அமராவதி: ஆந்திராவில் ரூ.13,430 கோடி மதிப்பிலான பல்வேறு வளர்ச்சி திட்டங்களை பிரதமர் மோடி தொடங்கி வைத்தார். அவர் ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடுவின் தொலைநோக்குப் பார்வையை பாராட்டினார்.
ஆந்திராவின் கர்னூலில், ரூ.13,430 கோடி மதிப்பிலான திட்டங்களை பிரதமர் மோடி துவங்கி வைத்தார். பின்னர் பிரதமர் மோடி பேசியதாவது: குஜராத்தில் உள்ள சோமநாதர் பூமியில் பிறந்து, விஸ்வநாதரின் இருப்பிடமான காசியில் சேவை செய்யும் வாய்ப்பு கிடைத்தது. இன்று ஸ்ரீசைலத்தின் ஆசீர்வாதங்களைப் பெறுவதும் எனது அதிர்ஷ்டம்.
சாலைகள், மின்சாரம், ரயில்வே, நெடுஞ்சாலைகள் மற்றும் வர்த்தகம் தொடர்பான பல திட்டங்கள் தொடங்கி வைக்கப்பட்டு, அவற்றுக்கான அடிக்கல் நாட்டப்பட்டுள்ளன. சந்திரபாபு நாயுடு மற்றும் பவன் கல்யாண் போன்ற தலைவர்களுடன், மத்திய அரசின் முழு ஆதரவுடன், ஆந்திரா சிறப்பான தலைமையைப் பெற்று உள்ளது. கடந்த 16 மாதங்களில் ஆந்திரா அசுர வளர்ச்சி கண்டுள்ளது. அறிவியல், புதுமையின் மையமாக திகழ்கிறது.
வளர்ச்சியடைந்த இந்தியா
சந்திரபாபு சொன்னது போல, இந்த விரைவான வேகத்தைக் காணும்போது, 2047ம் ஆண்டுக்குள், இந்தியா சுதந்திரம் அடைந்து 100 ஆண்டுகள் நிறைவடையும் போது, அது ஒரு வளர்ச்சி அடைந்த நாடாக இருக்கும் என்று என்னால் சொல்ல முடியும். 21ம் நூற்றாண்டு இந்தியாவின் நூற்றாண்டாக இருக்கும் என்று நான் உறுதியாக நம்புகிறேன். 21ம் நூற்றாண்டு 140 கோடி இந்தியர்களின் நூற்றாண்டாக இருக்கப் போகிறது.
பெரிய முதலீடு
எந்தவொரு நாடு அல்லது மாநிலத்தின் வளர்ச்சிக்கும் எரிசக்தி பாதுகாப்பு மிகவும் முக்கியமானது. இன்று, இங்கு மின்சாரத் துறையில் சுமார் ரூ.3 ஆயிரம் கோடி மதிப்புள்ள ஒரு திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. இது நாட்டின் எரிசக்தி திறனை அதிகரிக்கும். இரண்டு நாட்களுக்கு முன்புதான், கூகிள் நிறுவனம் ஆந்திராவில் ஒரு பெரிய முதலீட்டை அறிவித்தது.
கூகிள் இந்தியாவின் முதல் செயற்கை நுண்ணறிவு மையத்தை நமது ஆந்திராவில் கட்டப் போகிறது. நேற்று, கூகிள் தலைமை நிர்வாக அதிகாரியுடன் நான் பேசிக் கொண்டிருந்தபோது, அமெரிக்காவிற்கு வெளியே உலகெங்கிலும் உள்ள பல நாடுகளில் முதலீடுகள் இருப்பதாக அவர் என்னிடம் கூறினார். ஆனால், இப்போது ஆந்திராவில் மிகப்பெரிய முதலீட்டைச் செய்யப் போகிறோம்.
இந்த புதிய ஏஐ மையத்தில் பிரம்மாண்ட வசதிகள் ஏற்பாடு செய்யப்பட இருக்கின்றன. இது இந்தியாவுக்கு மட்டுமல்ல, முழு உலகிற்கும் சேவை செய்யும். இதற்காக ஆந்திர மக்களுக்கு நான் சிறப்பு வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன், மேலும் சந்திரபாபு நாயுடுவின் தொலைநோக்குப் பார்வைக்கு மிகவும் பாராட்டுகிறேன். இவ்வாறு பிரதமர் மோடி பேசினார்.
வழிபாடு
முன்னதாக, ஆந்திராவில் உள்ள ஸ்ரீசைலம் மல்லிகார்ஜுன சுவாமி கோவிலில் பிரதமர் மோடி வழிபாடு நடத்தினார். அவருக்கு கோவில் நிர்வாகம் சார்பில் சிறப்பு மரியாதை அளிக்கப்பட்டது. இது குறித்து பிரதமர் மோடி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
ஸ்ரீசைலத்தில் உள்ள மல்லிகார்ஜுன சுவாமி தேவஸ்தானத்தில் பிரார்த்தனை செய்தேன். இந்தியர்களின் நல்வாழ்வு மற்றும் நல்ல ஆரோக்கியத்திற்காக பிரார்த்தனை செய்தேன். அனைவரும் மகிழ்ச்சியாக இருக்கட்டும். இவ்வாறு பிரதமர் மோடி கூறியுள்ளார்.






மேலும்
-
நாகேந்திரா ஆதரவாளர்கள் வீடுகளில் ஈ.டி., சோதனை
-
நிர்வாக மேம்பாட்டு ஆணையம் 5677 சிபாரிசுகள் தாக்கல்
-
தொழிற்சாலை அமைக்க ஒத்துழைப்பு: மத்திய அமைச்சர் குமாரசாமி எதிர்பார்ப்பு
-
பிரியங்க் கார்கேயை ஆபாசமாக திட்டிய மஹாராஷ்டிரா நபர் கைது
-
5 மாவட்டங்களுக்கு இன்று 'ஆரஞ்ச் அலர்ட்' : வங்கக்கடலில் உருவாகிறது காற்றழுத்த தாழ்வு
-
கணவனை ஆள் வைத்து கொன்ற மனைவி: தாயை காட்டிக்கொடுத்த 8 வயது மகன்