குற்ற வழக்கில் சிக்கியவர் திருச்சி ஏர்போர்ட்டில் கைது

திருச்சி: மலேசியாவில் இருந்து திருச்சி வந்த வாலிபர், குற்றவழக்கில் தொடர்புடையவர் என்று தெரிய வந்ததால், அவர் ராமநாதபுரம் போலீசாரிடம் ஒப்படைக்கப்பட்டார்.

ராமநாதபுரம் மாவட்டம், நீலகண்டி ஊரணியைச் சேர்ந்தவர் குபேந்திரன், 25. இவர் கடந்த, 2022ம் ஆண்டு கேணிக்கரை போலீஸ் ஸ்டேஷன் பகுதியில் நடந்த குற்ற வழக்கில் தொடர்புடையவர். போலீசாருக்கு பயந்து வெளிநாட்டுக்கு சென்று விட்டார். இதனால் இவரது பாஸ்போர்ட் குறித்த விவரங்கள் அனைத்து விமான நிலையங்களிலும் அளிக்கப்பட்டு, தேடப்படும் குற்றவாளியாக அறிவிக்கப்பட்டிருந்தார். இந்நிலையில் குபேந்திரன் நேற்று முன்தினம் காலை, மலேசியாவில் இருந்து பாடிக் விமானம் மூலம், திருச்சி வந்தார். அவரது பாஸ்போர்ட் விமான நிலைய அதிகாரிகள் சோதனையிட்டபோது, அவர் தேடப்படும் குற்றவாளி என்று தெரிய வந்தது. இதையடுத்து அவர் திருச்சி விமான நிலைய போலீசில் ஒப்படைக்கப்பட்டார். அவர்கள் ராமநாதபுரம் மாவட்டம், கேணிக்கரை போலீசாருக்கு தகவல் தெரிவித்து, அவர்கள் வந்து குபேந்திரனை கைது செய்து அழைத்துச் சென்றனர்.

Advertisement