தேவகோட்டை அருகே சித்தானுாரில் ரோடு சேதம் பஸ் போக்குவரத்து நிறுத்தம்

தேவகோட்டை: தேவகோட்டை அருகே சித்தானுாரில் போடப்பட்ட புதிய தார் ரோடு 20 மாதங்களில் பெயர்ந்ததால் பஸ் போக்குவரத்து நிறுத்தப்பட்டு, பள்ளி மாணவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

கண்ணங்குடி ஒன்றியம், சித்தானுார் கிராமத்திற்கு தேவகோட்டை- கண்ணங்குடி ரோட்டிலிருந்து விலக்கு ரோடு செல்கிறது.

குடியிருப்புக்கு செல்லும் ரோட்டை 2022 - -23ல் கிராம சாலைகள் திட்டத்தில் ரூ.88 லட்ச மதிப்பில் தார் ரோடு போடப்பட்டது.

அதில் ஐந்தாண்டு பராமரிப்புக்கு ரூ.8 லட்சம் அனுமதிக்கப்பட்டுள்ளது. இந்த ரோட்டில் 3 மாதத்திற்கு முன்பாக கிராமத்தினர் கோரிக்கையை அடுத்து அரசு பஸ் விடப்பட்டது.

தேவகோட்டை பள்ளிகளில் படிக்கும் மாணவிய மாணவியர் பயனடைந்தனர்.

இந்நிலையில் கண்மாய் அருகில் உள்ள ரோடு மழையில் சேதமானது. இருபதே மாதங்களில் புதிய ரோடு பெயர்ந்ததால் பஸ் போக்குவரத்திற்கு சிரமமாக உள்ளது.

பஸ் சக்கரம் பள்ளத்தில் பதிந்துவிடுமோ என்ற அச்சத்தில் பஸ் போக்குவரத்து கிராமத்திற்குள் செல்வது நிறுத்தப்பட்டது. மீண்டும் மாணவர்கள் பஸ் போக்குவரத்தின்றி பாதிக்கப்பட்டனர்.

மாவட்ட நிர்வாகம் தலையிட்டு ரோட்டை விரைவாக சீரமைத்து பஸ்களை இயக்க கோரியுள்ளனர்.

Advertisement