பீஹாரில் தேஜ கூட்டணி வெற்றி பெறும்: தேர்தல் பிரசாரத்தில் மோடி உறுதி

6


பாட்னா: பீஹார் சட்டசபை தேர்தலில் தேஜ கூட்டணி வெற்றி பெறும் என தேர்தல் பிரசாரத்தில் பிரதமர் மோடி தெரிவித்தார்.


பீஹார், போஜ்பூர் மாவட்டத்தில் உள்ள அர்ராவில் நடந்த தேர்தல் பிரசாரத்தில் பிரதமர் மோடி பேசியதாவது: காங்கிரஸ், ஆர்ஜேடி பீஹாரின் அடையாளத்தை அழிக்க விரும்புகின்றன. வாக்காளர்கள் இரண்டு கட்சிகளைப் பற்றி விழிப்புடன் இருக்க வேண்டும். ஆப்பரேஷன் சிந்தூர் நடவடிக்கையின் போது, பாகிஸ்தானில் குண்டுவெடிப்புகள் நடந்தன. ஜம்மு காஷ்மீரில் எந்த அரசாங்கமும் 370 வது பிரிவை ரத்து செய்ய முடியாது.

ஆனால் நான் ஒரு உத்தரவாதம் அளித்து அதைச் செய்தேன். பீஹார் விரைவில் கிழக்கு இந்தியாவில் ஜவுளி மற்றும் சுற்றுலாவின் முக்கிய மையமாக மாறும். பீஹார் இளைஞர்கள் அனைவரும் சொந்த மாநிலத்தில் பணியாற்ற வேண்டும். மாநிலத்தை பெருமைப்படுத்த வேண்டும் என்று நாங்கள் விரும்புகிறோம். தேர்தலுக்கு பிறகு ஆர்ஜேடி மற்றும் காங்கிரஸ் ஆகிய இரண்டு கட்சிகளும் மோதி கொள்ளும். காங்கிரஸ் ஆர்ஜேடி கட்சியை சே ர்ந்த தேஜஸ்வியை முதல்வர் வேட்பாளராக அறிவிக்க விரும்பவில்லை.



இரண்டு கட்சிகள் இடையே மிகப்பெரிய உட்கட்சி மோதல் நடந்து வருகிறது. மகா கூட்டணியின் தேர்தல் அறிக்கை பொய்களின் மூட்டையாக இருக்கிறது. பொய்கள், வஞ்சகம் மறறும் மக்களை ஏமாற்றுவதை அடிப்படையாக கொண்டுள்ளது. வரும் ஆண்டுகளில் ஒரு கோடி வேலைவாய்ப்புகளை உருவாக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டு உள்ளது. இதற்கான அனைத்து திட்டங்களும் மக்கள் முன் வைக்கப்பட்டு உள்ளது. இவ்வாறு பிரதமர் மோடி பேசினார்.

வளமான இந்தியா



முசாபர்பூரில் நடந்த தேர்தல் பிரசாரத்தில் அமித்ஷா பேசியதாவது: பீஹாரின் சீதாமர்ஹியை அயோத்தியுடன் இணைக்கும் வந்தே பாரத் ரயில் சேவை கொண்டு வரப்படும். ஆட்சி மாற்றம் கொண்டு வந்து, பீஹாரில் காட்டாட்சி ராஜ்ஜியத்தை கொண்டுவர முயற்சிகள் நடந்து வருகின்றன. பிரதமர் மோடி மற்றும் நிதிஷ் குமார் ஆட்சியின் கீழ், ரயில் இன்ஜின்களை ஏற்றுமதி செய்த முதல் மாநிலமாக பீஹார் மாறியது. பிரதமர் மோடி இந்தியாவை பாதுகாப்பானதாகவும், வளமானதாகவும் மாற்றினார். பல்வேறு நலத்திட்டங்களை அறிமுகப்படுத்தினார்.

3 இலாகாக்கள்



தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சிக்கு நீங்கள் அளிக்கும் ஓட்டுக்கள் பீஹாரை ஆர்ஜேடியின் காட்டாட்சி ராஜ்ஜியத்திலிருந்து காப்பாற்றும். லாலு தனது மகனை முதல்வராக்கவும், சோனியா தனது மகனை பிரதமர் ஆக்கவும், முயற்சிக்கின்றனர். ஆனால் இரு பதவிகளும் காலியாக இல்லை. லாலுவின் மகன் பீஹார் முதல்வரானால், கடத்தல், மிரட்டி பணம் பறித்தல், கொலை ஆகியவற்றுக்கு 3 இலாகாக்கள் உருவாக்கப்படும். வரும் பீஹார் சட்டசபை தேர்தலில் பிரதமர் மோடி மற்றும் நிதிஷ் குமார் தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணிக்கு மக்கள் அனைவரும் ஓட்டளிக்க வேண்டும்.

ஆதரியுங்கள்



மீண்டும் தேஜ கூட்டணி ஆட்சிக்கு வந்தால், சீதாமர்ஹியில் அன்னை சீதாவுக்கு பிரமாண்டமான கோவில் கட்டப்படும். ஆர்ஜேடி ஆட்சியின் போது அதிகாரி ஜி.கிருஷ்ணய்யா அடித்து கொல்லப்பட்டார். தெருக்களில் குற்றம் சம்பவங்கள் அடிக்கடி நடந்தது. ஒரு காலத்தில் குற்றவாளிகளின் கூடாரமாக இருந்த மாநிலம், இப்போது தேசிய ஜனநாயக கூட்டணி அரசின் கீழ், விரைவான வளர்ச்சி பாதையில் சென்று கொண்டிருக்கிறது. தேஜ கூட்டணி ஆட்சியில் எய்மஸ் மருத்துவமனை, விமான நிலையம், மெட்ரோ ரயில் மற்றும் மின் உற்பத்தி நிலையம் கொண்டு வரப்பட்டது. இவ்வாறு அமித்ஷா பேசினார்.

Advertisement