கோலாரில் டிச., 1 முதல் ஹெல்மெட் கட்டாயம்

முல்பாகல்: ''கோலார் மாவட்டத்தில் டிசம்பர் 1 முதல் ஹெல்மெட் அணிவது கட்டாயம். தவறினால் பைக்குகள் பறிமுதல் செய்து, அபராதம் வசூலிக்கப்படும்,'' என, கோலார் எஸ்.பி. நிகில் தெரிவித்தார்.

முல்பாகலின் கிராம போலீஸ் நிலையத்தில் அவர் அளித்த பேட்டி:

சாலை விபத்துகள் அதிகரித்து வருகின்றன. ஹெல்மெட் அணியாமல் வாகனங்கள் ஓட்டுவதால், விபத்தில் உயிரிழப்புகள் அதிகரிக்கின்றன. விழிப்புணர்வு மேற்கொண்ட போதிலும், யாரும் ஒரு பொருட்டாகவே கருதுவதாக தெரியவில்லை.

ஹெல்மெட் அணிய வேண்டும் என்பது நாடு முழுதும் உள்ள சட்டமாகும். ஆனால் கோலார் மாவட்டத்தில் ஹெல்மெட் அணியாமல் அலட்சியம் செய்கின்றனர்.

டிசம்பர் 1 முதல் ஹெல்மெட் அணிவது கட்டாயம். தவறினால் வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டு, அபராதம் விதிக்கப்படும்.

இன்றைய இளைஞர்கள் இரு சக்கர வாகனங்களில் ஆபத்தான முறையில் சாகசம் செய்து வருகின்றனர். சைலென்சர் இல்லாமல் வாகனங்கள் இயக்கி சத்தம் எழுப்பி பிறருக்கு இடையூறு ஏற்படுத்துகின்றனர். அத்தகையோர் மீதும் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement