பெரு நாட்டில் பஸ்-சரக்கு வேன் மோதி கோர விபத்து: 37 பேர் பலியான சோகம்

லிமா; பெரு நாட்டில் பஸ்சும், சரக்கு வேனும் மோதிக் கொண்டது. இந்த விபத்தில் 37 பேர் பலியாகினர்.

இதுபற்றிய விவரம் வருமாறு;

பெருவை சிலியுடன் இணைக்கும் சுர் நெடுஞ்சாலையில் இந்த விபத்து நிகழ்ந்தது. லாமோசாஸ் என்ற நிறுவனத்தின் பஸ் காரவேலி மாகாணத்தில் உள்ள சாலா என்ற நகரத்தில் இருந்து அரேக்விபா என்ற இடத்திற்கு சென்று கொண்டு இருந்தது.

பஸ்சில் மொத்தம் 60 பேர் இருந்துள்ளனர். வளைவு ஒன்றில் திரும்பும் போது, எதிரே வந்த சரக்கு வேன் ஒன்றின் மீது பஸ் மோதி உள்ளது. மோதிய வேகத்தில் பஸ்சானது 200 மீட்டர் ஆழம் கொண்ட பள்ளத்தாக்கில் உருண்டு விழுந்தது. சம்பவ இடத்திலேயே 37 பேர் பலியாகினர்.

விபத்து குறித்து தகவலறிந்த தீயணைப்புத்துறை மற்றும் மீட்புக் குழுவினர் உடனடியாக அங்கு விரைந்தனர்.மீட்புப் பணிகளில் இறங்கிய அவர்கள், இடிபாடுகளில் இருந்த 37 சடலங்களை மீட்டனர்.

மேலும் படுகாயம் அடைந்த 26 பேரை மீட்டு மருத்துவமனைகளுக்கு அனுப்பி வைத்தனர். அவர்களில் 3 பேரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளதால் பலி எண்ணிக்கை மேலும் உயரும் என்று தெரிகிறது.

அசுர வேகம், போதிய பாதுகாப்பு இல்லாத சாலைகள் மற்றும் உரிய எச்சரிக்கை அறிவிப்புகள் இல்லாமையே பெருவில் இதுபோன்ற விபத்துகள் அடிக்கடி நிகழ காரணமாகி விடுகின்றன.

Advertisement