த.வெ.க.,வுடன் கூட்டணிக்கு காங்.,ல் மாவட்ட தலைவர்கள்; 'கிரீன் சிக்னல்' ரகசிய சர்வேயில் 'பளிச்'

16


மதுரை: சட்டசபை தேர்தலில் த.வெ.க., உடனான கூட்டணி குறித்து காங்., மாவட்ட தலைவர்களிடையே நடத்திய ரகசிய சர்வேயில், 'தொகுதி பங்கீட்டில் தி.மு.க., தற்போதும் சொதப்பினால் விஜய்யுடன் களமிறங்கலாம்' என கருத்து தெரிவித்துள்ளனர்.


தமிழக அரசியல் களத்தில் 'ஆட்சியில் பங்கு' என்ற கோஷத்தை த.வெ.க., கொளுத்தி போட்டுள்ளதால் வரும் சட்டசபை தேர்தலில் தி.மு.க., பல நெருக்கடிகளை சந்திக்கும் சூழல் ஏற்பட்டுள்ளது. குறிப்பாக காங்., வி.சி., ம.தி.மு.க., உள்ளிட்ட கட்சிகளின் கூட்டணி பலத்தால் மீண்டும் ஆட்சியை கைப்பற்றி விடலாம் என்ற கனவில் தி.மு.க., உள்ளது.

ஆனால் 'ஆட்சியில் பங்கு' என்ற விஜய்யின் 'துாண்டிலால்' காங்., வி.சி., உள்ளிட்ட கட்சிகளுக்கு சற்று சலனம் ஏற்பட்டுள்ளது. தமிழக காங்., தலைவர் செல்வப்பெருந்தகைக்கு தி.மு.க., மீது பாசம் அதிகம். ஆனால் தமிழக மேலிட பொறுப்பாளராக கிரிஷ் சோடங்கர் பதவியேற்ற பின் தி.மு.க., - காங்., கூட்டணியில் அவ்வப்போது சில சலசலப்புகள் ஏற்படுகின்றன.



குறிப்பாக திருநெல்வேலி காங்., மாநாட்டில் கிரிஷ் சோடங்கர் பேசும்போது 'காங்.,க்கு 125 தொகுதிகள் ஒதுக்க வேண்டும்' என கறார் காட்டினார். மேலும் முன்னாள் தலைவர் கே.எஸ்., அழகிரி, எம்.பி.,க்கள் மாணிக்கம் தாகூர், கார்த்தி என பெரும்பாலான தலைவர்கள் 'ஆட்சியில் பங்கு என்பது எங்கள் உரிமை' என தெரிவித்தனர்.

'கூட்டணியில் இருந்துகொண்டு இவ்வாறு கருத்துத் தெரிவிக்கலாமா' என ஆளுங்கட்சி தனது அதிருப்தியை வெளிப்படுத்தியதால் 'கூட்டணியை அகில இந்திய தலைமை தான் முடிவு செய்யும். தமிழக தலைவர்கள் தேவையின்றி கருத்துத் தெரிவிக்க வேண்டாம்' என கட்டுப்பாடு விதித்தது.



விஜய் முதல்வர் வேட்பாளர் இந்நிலையில் கரூர் சம்பவத்தால் விஜய்க்கு ஏற்பட்ட நெருக்கடியால் அவர் பாஜ.,வில் தஞ்சமடைவார், அ.தி.மு.க., - பா.ஜ., - த.வெ.க., கூட்டணி அமையும் என எதிர்பார்ப்பு கிளம்பியது. ஆனால் 'விஜய் தான் முதல்வர் வேட்பாளர்' என்ற அக்கட்சி அறிவிப்பால் அந்த கூட்டணிக்கு முற்றுப்புள்ளி விழுந்துள்ளது.


இதற்கிடையே தி.மு.க.,வை வீழ்த்த காங்., கூட்டணியை விஜய் விரும்புவதாகவும், அதற்காக விஜய் தரப்பு காங்., பொதுச் செயலாளரான பிரியங்கா எம்.பி., தரப்புடன் தொடர்பில் உள்ளதாகவும் தெரிகிறது. இந்நிலையில் தான் காங்., மேலிட பொறுப்பாளர் ஒருவர் தனது சொந்த முயற்சியால் தமிழகத்தில் உள்ள காங்., மாவட்ட தலைவர்கள் மனநிலை என்ன என்பதை அறிய ரகசிய சர்வே நடத்தினார். அதில் பெரும்பாலான தலைவர்கள் விஜய் உடனான கூட்டணிக்கு 'கிரீன் சிக்னல்' கொடுத்துள்ளனர். இத்தகவல் தெரிந்து ஆளுங்கட்சி அதிர்ச்சியில் உள்ளது.
எந்த பலனும் இல்லை காங்., மாவட்ட தலைவர்கள் சிலர் கூறியதாவது: கூட்டணி கட்சி என்று தான் பெயர், நான்கரை ஆண்டு தி.மு.க., ஆட்சியில் காங்., தலைவர்கள், நிர்வாகிகள் எந்த பலனும் அடையவில்லை. மாவட்டங்களில் உரிய மரியாதை கூட கிடைப்பதில்லை. கோரிக்கை குறித்து பெரும்பாலான அமைச்சர்கள், எம்.எல்.ஏ.,க்களிடம் காங்., நிர்வாகிகள் மனு கொடுத்தாலும் நடவடிக்கை எடுக்கவில்லை.



தொகுதிகளில் சிறிய டெண்டர்கள் கூட காங்., நிர்வாகிக்கு விட்டுக்கொடுக்கவில்லை. இதனால் இந்த தேர்தலில் காங்., உரிமையை மீட்டெடுக்க வேண்டும். அதிக தொகுதிகளில் காங்., போட்டியிட வேண்டும். அதற்கேற்ப தொகுதிகளை பெறுவதில் தொகுதி பங்கீட்டில் 'கறார்' காட்ட வேண்டும்.
அந்த வகையில் 40 தொகுதிகள் கிடைத்தால் கூட்டணியை தொடர வேண்டும். அது கிடைக்காதபட்சத்தில் த.வெ.க., உடன் கூட்டணி வைப்பது காங்., வளர்ச்சிக்கு உதவும். இதுகுறித்த தமிழக காங்., செயற்குழு, பொதுக்குழுவில் தீர்மானம் நிறைவேற்றி அகில இந்திய தலைமைக்கு அனுப்பி வைக்க வேண்டும் என்றனர்.

Advertisement