பீஹாரில் பலன் தராத ராகுலின் யாத்திரை

8


புதுடில்லி: பீஹாரில் ராகுல் பேரணி நடத்திய இடங்களில் அமைந்துள்ள தொகுதிகளில் போட்டியிட்ட காங்கிரஸ் கட்சிக்கு பின்னடைவு ஏற்பட்டுள்ளது.


பீஹாரில் நடந்த வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப்பணிக்கு காங்கிரஸ், ஆர்ஜேடி உள்ளிட்ட கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தன. பாஜ ஓட்டுகளை திருடுவதாக கூறி காங்கிரஸ் எம்பி ராகுல் பீஹாரில் யாத்திரை ஒன்றை நடத்தினார்.


ஆக.,17 ல் துவங்கிய சசாராம் பகுதியில் துவங்கிய இந்த யாத்திரை 25 மாவட்டங்களில் உள்ள 110 சட்டசபை தொகுதிகளை கடந்து பாட்னாவில் செப்.,1 ல் நிறைவு பெற்றது. சுமார் ,1300 கி.மீ., தூரம் இந்த யாத்திரை நடந்தது.


ஆனால், இந்த யாத்திரையால் காங்கிரஸ் கட்சிக்கு எந்த பலனும் கிடைக்கவில்லை என்பது தேர்தல் முடிவுகள் மூலம் தெரியவந்துள்ளது. இந்த தேர்தலில் காங்கிரஸ் 61 தொகுதிகளில் போட்டியிட்டது. ஆனால், 6 ல்( வால்மிக நகர், சன்பாடியா, அராரியா, கிஷன்கஞ்ச் மற்றும் மணிஹரி) மட்டுமே வெற்றி பெற்றுள்ளது. அதுவும், ராகுல் யாத்திரை சென்ற பகுதிகளில் இல்லை. இதனால்,ராகுல் யாத்திரை சென்ற அனைத்து பகுதிகளிலும் காங்கிரஸ் பின் தங்கியுள்ளது.


கடந்த 2022 முதல் 2024 வரை ராகுல் நடத்திய பாரத்ஜோடோ யாத்திரையால் லோக்சபா தேர்தலில், கடந்த தேர்தலை விட இம்முறை காங்கிரஸ் கட்சிக்கு அதிக தொகுதிகள் கிடைத்தது. தெலுங்கானாவிலும் ஆட்சியை பிடித்தது. அதேபோல் பீஹாரிலும் பலன் அடையலாம் என காங்கிரசார் எதிர்பார்த்து வந்தனர். ஆனால், தேர்தல் முடிவுகள், ராகுலால் எந்த தாக்கத்தையும் ஏற்படுத்த முடியவில்லை என்பதை காட்டுகிறது.


பாஜ மற்றும் தேர்தல் கமிஷன் மீது ஓட்டுத் திருட்டு என்ற குற்றச்சாட்டை ராகுல் தொடர்ந்து கூறிவந்தாலும் அதனை பீஹார் வாக்காளர்கள் கண்டுகொள்ளவில்லை.

காங்கிரசின் தோல்விக்கு காரணம் என்ன

பீஹாரில் ஏற்பட்ட தோல்வி குறித்து காங்கிரஸ் ஆராய வேண்டியிருந்தாலும், ஆரம்பம் முதல் மஹாகத்பந்தன் கூட்டணியில் ஒற்றுமையில்லாதது, தொகுதிகளில் எதிரொலித்துள்ளதாக அரசியல் விமர்சகர்கள் கூறுகின்றனர். ஆர்ஜேடி தலைவர் தேஜஸ்வியை முதல்வர் வேட்பாளராக ஏற்க காங்கிரஸ் தயக்கம் காட்டி வந்தது.


ராகுலின் யாத்திரை, தொண்டர்கள் மத்தியில் புது உற்சாகத்தை ஏற்படுத்தினாலும், தேர்தல் பிரசாரம் முடியும் போது அது மாயமாகிவிட்டது. உற்சாகம் , மகிழ்ச்சி ஆகியவை போனதால், தேர்தல் களத்தில் காங்கிரஸ் கட்சிக்கு பெரிய பாதிப்பை ஏற்படுத்தியது. கூட்டணி கட்சிகள் இடையே நட்பு ரீதியிலான போட்டி மற்றும் மோதல் காரணமாக ஏற்பட்ட குழப்பம், காங்கிரசை மட்டும் அல்லாமல் ஆர்ஜேடியையும் பாதித்தது என்கின்றனர் அரசியல் நோக்கர்கள்.

Advertisement