தலை இல்லா முண்டமாக காவல் துறை: அ.தி.மு.க., 'மாஜி' காட்டம்

திண்டிவனம்: ''தமிழகத்தில் அரிசி, பருப்பு கிடைக்கிறதோ இல்லையோ; தடையில்லாமல் கஞ்சா, அபின் கிடைக்கின்றன'' என, அ.தி.மு.க., முன்னாள் அமைச்சர் சண்முகம் பேசினார்.

திண்டிவனத்தில் அ.தி.மு.க., சார்பில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் அவர் பேசியதாவது:

தமிழகத்தில் தினந்தோறும் பலாத்காரம், கொலை, கொள்ளை, கஞ்சா, அபின் என செய்திகள் வருகின்றன. அரிசி, பருப்பு கிடைக்கிறதோ இல்லையோ, தடையில்லாமல் கஞ்சா, அபின் கிடைக்கின்றன.

மாணவியர் பலாத்காரம் செய்து, கொல்லப்படுகின்றனர். தாய் கண் எதிரே மகளை பாலியல் வன்கொடுமை செய்கின்றனர். நிரந்த டி.ஜி.பி., இல்லாமல், தலை இல்லாத முண்டமாக காவல் துறை இருக்கிறது.

கருணாநிதி இறக்கும் வரை, ஸ்டாலினை கட்சிக்கும் தலைவராக்கவில்லை; முதல்வராக்கவும் இல்லை. தி.மு.க.,வில் இல்லாத செயல் தலைவர் பதவியை ஸ்டாலினுக்கு கொடுத்தார்.

ஆனால், திறமை இல்லாத ஒருவரை, தன் மகன் என்பதால் துணை முதல்வராக்கி உள்ளார் ஸ்டாலின்.

சிறப்பு தீவிர வாக்காளர் திருத்தப் பணி என்றாலே ஸ்டாலினுக்கு ஜன்னி வந்து விடுகிறது. இப்பணியில் கீழ்நிலை பணியாளர்கள் நேர்மையாக உள்ளனர். ஆனால், மாவட்ட தேர்தல் அதிகாரிகளான கலெக்டர்கள், தி.மு.க., விசுவாசிகளாக மாறியிருக்கின்றனர்.

ஸ்டாலின் ஆட்சியின் ஆயுட்காலம் இன்னும் 60 நாட்கள் தான். எனவே, அதிகாரிகளை எச்சரிக்கிறோம். தி.மு.க.,வின் அதிகாரத்திற்கு பயந்து செயல்பட்டால், அதன் விளைவுகளை நீங்கள் சந்திக்க நேரிடும்.

இவ்வாறு அவர் பேசினார்.

Advertisement