கடனை வைத்து மதிப்பீடு செய்வது பிழை; கூட்டணிக்கு முட்டுக்கொடுக்கிறார் ப.சிதம்பரம்

57

சென்னை: ''மொத்தக் கடனை வைத்து ஒரு மாநிலத்தின் பொருளாதார நிலையை மதிப்பிடுவது என்பது பிழையானது,'' என முன்னாள் மத்திய நிதி அமைச்சர் ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார்.



அவரது அறிக்கை: எல்லோருக்கும் என் இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள். ஒரு மாநிலத்தின் மொத்தக் கடனை வைத்து அந்த மாநிலத்தின் பொருளாதார நிலையை மதிப்பிடுவது என்பது பிழையானது. அமெரிக்காவில் தொடங்கி இங்கிலாந்து, ஜப்பான், பிரான்ஸ், கனடா வரை எல்லா வளர்ந்த நாடுகளின் மொத்தக் கடன் ஆண்டு தோறும் கூடுகிறது

இந்தியாவின் மொத்தக் கடனும் எல்லா மாநிலங்களின் மொத்தக் கடன்களும் ஆண்டுதோறும் கூடுகின்றன. இது இயல்பு. மொத்தக் கடன் என்பது சரியான அளவை அல்ல. மொத்த உற்பத்தியில் மொத்தக் கடன் எத்தனை சதவீதம் என்பதே பொருத்தமான அளவை. தமிழகத்தில் இந்த அளவை 2021-22ம் ஆண்டு முதல் 2025-26ம் ஆண்டு வரை ஸ்திரமாக (ஒரே நிலையில்) இருந்து வருகிறது.



நிதிப் பற்றாக்குறை ஒவ்வொரு ஆண்டும் குறைக்கப்பட்டு 2025-26ம் ஆண்டில் நிதி ஆயோக் விதித்த வரம்பான 3% என்ற நிலையைத் தமிழகம் எட்டும் என்று இந்த ஆண்டின் மதிப்பீடு சுட்டிக் காட்டுகிறது. இது பாராட்டக்கூடியது.


நிதி மேலாண்மை மேலும் செம்மைப்படுத்த வேண்டும் என்பது ஏற்புடையது. ஆனால் தமிழகத்தின் பொருளாதாரத்தை உத்தரப் பிரதேசத்தின் பொருளாதாரத்துடன் ஒப்பிடுவது என்பது பிழை. இவ்வாறு ப.சிதம்பரம் கூறியுள்ளார்.

பிரவீன் சக்கரவர்த்தி விமர்சனம்

முன்னதாக, காங்கிரஸ் கட்சியின் தரவு பகுப்பாய்வுப்பிரிவு தேசிய தலைவர் பிரவீன் சக்கரவர்த்தி, தமிழகத்தின் கடன், உ.பி., மாநிலத்தின் கடனை காட்டிலும் அதிகமாக இருப்பதாகக்கூறி விமர்சனம் செய்திருந்தார். அதற்கு திமுக தரப்பில் கடும் அதிருப்தி தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில், கூட்டணி கட்சியை திருப்திப்படுத்தும் நோக்கில், சிதம்பரம் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

Advertisement