பல மடங்கு உயர்கிறது கலால் வரி: பிப்ரவரி 1 முதல் சிகரெட் விலை அதிகரிக்கும்!

13

நமது நிருபர்



சிகரெட் உள்ளிட்ட புகையிலை பொருட்கள் மீதான கூடுதல் கலால் வரி சட்டத்திருத்தம் பிப்ரவரி 1ம் தேதி முதல் அமலுக்கு வரும் என மத்திய அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.




நடந்து முடிந்த குளிர்கால கூட்டத்தொடரில், கலால் திருத்த மசோதா - 2025ஐ மத்திய அரசு நிறைவேற்றியது. சிகரெட், சுருட்டு, ஹூக்கா உள்ளிட்ட புகையிலை பொருட்கள் மீதான வரிகளை அதிகரிப்பதே இதன் நோக்கம். தற்போதைய சட்டத்தின்படி, சிகரெட்டுகளின் நீளம் மற்றும் வகையை பொறுத்து, 1,000 சிகரெட்டுகளுக்கு, 200 முதல் 735 ரூபாய் வரை கலால் வரி விதிக்கப்படுகிறது.


இந்நிலையில் இன்று (ஜனவரி 01) புகையிலை பொருட்களுக்கு கூடுதல் வரி விதிப்பு பிப்ரவரி 1ம் தேதி முதல் அமலுக்கு வருவதாக மத்திய அரசு அரசாணையை வெளியிட்டுள்ளது. இதனால் பிப்ரவரி 1 தேதி முதல் சிகரெட் விலை கணிசமாக உயருகிறது. 1,000 சிகரெட்களுக்கு ரூ.2,050 முதல் ரூ.8,500 வரை கூடுதல் கலால் வரி விதிக்கப்பட்டு உள்ளது.


அதேபோல, மெல்லும் புகையிலை மீதான வரி, 25 சதவீதத்தில் இருந்து, 100; ஹூக்கா புகையிலை வரி, 25 சதவீதத்தில் இருந்து, 40; பைப் மற்றும் சிகரெட்டுகளுக்கான புகை கலவைகள் மீதான வரி, 60 சதவீதத்தில் இருந்து 325 சதவீதமாக அதிகரிக்க உள்ளது.



இந்த விலை உயர்வு, கலவையான விமர்சனங்களை பெற்றுள்ளது. புகைப்பழக்கத்தை கைவிட உதவும் என ஒரு தரப்பினரும், சட்ட விரோத விற்பனை அதிகரிக்கும் என, மற்றொரு தரப்பினரும் சமூக வலைதளங்களில் தெரிவித்துள்ளனர்.

Advertisement