'சிவப்பாக இருந்ததால் சந்தேகிக்கலை!' : கவர்னர் மாளிகையில் மாணவர் துாங்கிய விவகாரத்தில் போலீசார் கொடுத்த அதிர்ச்சி

6


புதுச்சேரி: 'சிவப்பாக இருந்ததால் கவர்னரின் உறவினர் என்று நினைத்து, போதை மாணவரை சந்தேகப்படவில்லை' என, போலீசார் கூறிய தகவல், அனைவரையும் அதிர்ச்சியடைய செய்துள்ளது.


புதுச்சேரி கவர்னர் மாளிகையில், 9ம் தேதி இரவு, 10:45 மணிக்கு குருசுக்குப்பம் சாலையில் உள்ள இரண்டாவது கிரில் கேட் வழியாக ஏறி குறித்து, ஜார்க்கண்ட் மாநில மாணவர் ஹர்திக் ஷா என்பவர் உள்ளே சென்று, கவர்னரின் மகன் அறையில் துாங்கினார். அதிகபட்ச பாதுகாப்பு வளையத்தில் உள்ள கவர்னர் மாளிகையில், சர்வ சாதாரணமாக 'கேட்' ஏறி நுழைந்து, போதை மாணவர் துாங்கியது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.


சம்பவம் நடந்த அன்றிரவு கவர்னர் மாளிகையில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த ஐ.ஆர்.பி.என்., போலீசார் மற்றும் ஊழியர்களை வெளியே விடாமல், கவர்னர் மாளிகையிலேயே போலீஸ் உயர் அதிகாரிகள் தீவிர விசாரணை செய்தனர். போதை மாணவர் முதல் மாடி வளாகத்தில் நடந்து செல்லும்போது, போலீஸ்காரர் ஒருவர் பார்த்துள்ளார்.'அந்த மாணவர் சிவப்பாகவும், வட மாநில சாயலில் இருந்ததாலும் கவர்னர் கைலாஷ்நாத்தின் உறவினர் என்று நினைத்து சந்தேகப்படவில்லை' என்று அந்த போலீஸ்காரர் கூறியுள்ளார். அந்த தகவல், போலீஸ் அதிகாரிகளை கடும் அதிர்ச்சி மற்றும் கோபத்தில் ஆழ்த்தியுள்ளது.


இதனால் பணியில் அலட்சியமாக இருந்த அனைவரையும் ஆயுதப்படைக்கு தற்காலிகமாக மாற்றி உள்ளனர்.இதற்கிடையே, போதை மாணவர் ஏறி வந்த இரண்டாவது நுழைவுவாயிலில் துப்பாக்கி ஏந்திய போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

Advertisement