ரஷ்யாவிடம் கச்சா எண்ணெய் வாங்க வேறு நாட்டிடம் ஏன் அனுமதி வாங்க வேண்டும்: ராகுல் கேள்வி

35

புதுடில்லி: ரஷ்யாவிடம் இருந்து கச்சா எண்ணெய் வாங்குவதற்கும், மற்ற நாடுகளுடன் உறவை பேணுவது என்பதையும் வேறு நாட்டின் அதிபரை முடிவு செய்ய ஏன் அனுமதிக்க வேண்டும் என்று காங்கிரஸ் எம்பி ராகுல் கேள்வி எழுப்பி உள்ளார்.



ஈரான் மீதான தாக்குதல் குறித்த விவாதத்தில் காங்கிரஸ் எம்பி ராகுல் பேசியதாவது: மத்திய கிழக்கு நாடுகளில் போர் துவங்கி உள்ளது. அமெரிக்கா, இஸ்ரேல் மற்றும் ஈரான் நாடுகள் சண்டையிட்டு வருகின்றன. இந்த போர் மோசமான விளைவுகளை ஏற்படுத்தப்போகிறது. 20 சதவீத கச்சா எண்ணெய் போக்குவரத்து நடக்கும் ஹார்முஸ் ஜலசந்தி மூடப்பட்டுள்ளது. இது பெரிய அளவில், குறிப்பாக நமக்கு பாதிப்பை ஏற்படுத்தும். இந்த ஜலசந்தி வழியாக நமக்கு அதிகளவு கச்சா எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயு வருகிறது. இதனால் நமக்கு பெரிய பாதிப்பு ஏற்படும். அதன் தாக்கங்கள் தெரிய துவங்கி உள்ளன. உணவகங்கள் மூடப்பட்டுள்ளன. எல்பிஜி குறித்து பெரியளவில் பதற்றம் ஏற்பட்டுள்ளது. இது துவக்கம் தான்.



ஒவ்வொரு நாட்டிற்கும் அடித்தளமாக எரிசக்தி பாதுகாப்பு உள்ளது. யாரிடம் இருந்து கச்சா எண்ணெய், இயற்கை எரிவாயு வாங்க வேண்டும். ரஷ்யாவிடம் வாங்கலாமா அல்லது வேண்டாமா என அமெரிக்காவை முடிவு செய்ய அனுமதித்து உள்ளோம். எண்ணெய் சப்ளை செய்யும் பல்வேறு நாடுகளுடனான உறவை நாம் முடிவு செய்கிறோம். ரஷ்யாவிடம் இருந்து கச்சா எண்ணெய் வாங்குவதற்கும், யாருடன் உறவை பேண வேண்டும் என வேறொரு நாடு, வேறொரு நாட்டின் அதிபர் முடிவு செய்வதற்கு இந்தியா போன்ற பெரிய நாடு ஏன் அனுமதிக்க வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.

Advertisement