ஆட்சியை இழந்தது திமுக; முதல்வர், அமைச்சர்கள் படுதோல்வி

110

நமது சிறப்பு நிருபர்




2026 தமிழக சட்டசபை தேர்தலில், திமுக படுதோல்வி அடைந்தது. தவெக., அதிக எண்ணிக்கையிலான தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளது.

தமிழகத்தில் நடிகர் விஜயின் தவெக, 110 தொகுதிகளில் முன்னிலை மற்றும் வெற்றிமுகத்தில் இருக்கிறது. முதல்வர் ஸ்டாலின் தோல்வி அடைந்துள்ளார். அமைச்சர்கள் பலரும் படுதோல்வி அடைந்துள்ளனர். தமிழகத்தில் 2021ல் ஆட்சிக்கு வந்த திமுக, ஐந்தாண்டுகளில் மக்கள் மத்தியில் கடும் அதிருப்தியை சம்பாதித்தது. அதிமுகவில் ஏற்பட்ட இபிஎஸ், ஓபிஎஸ் பிளவுக்கு தங்களுக்கு சாதகமாக இருக்கும் என்று கருதி, தன் மகன் உதயநிதிக்கு துணை முதல்வர் பதவியை கொடுத்தார் முதல்வர் ஸ்டாலின்.
இந்த செயல், பொதுமக்கள், பிற கட்சியினர் மட்டுமின்றி, சொந்த கட்சியினர் மத்தியிலும் கடும் அதிருப்தியை ஏற்படுத்தியது. அது மட்டுமின்றி, துறை அமைச்சர்கள் சரமாரியாக ஊழல்களில் ஈடுபட்டனர். டெண்டர் விடுவதில் தொடங்கி, அரசு பணி நியமனம், குவாரிகளில் கல், மண், எம் சாண்ட் கொண்டு செல்வது வரை எல்லாவற்றிலும் ஊழல் நடந்தது.


அமைச்சர்களே முன்னின்று ஊழல் செய்வதாக அமலாக்கத்துறை ஆதாரங்களுடன் குற்றம் சாட்டியது. ஆனாலும், எந்த நடவடிக்கையும் எடுக்காமல், அமைச்சர்களை பாதுகாத்தது முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான அரசு. எந்த வேலையும் செய்யாமல் விளம்பரம் மட்டுமே செய்து கொண்டிருப்பதாக, சரமாரியாக எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டின.


வேங்கைவயல் உள்ளிட்ட பல சம்பவங்களில் அரசு மெத்தனமாக நடந்து கொண்டதாக கூட்டணி கட்சியினரே குற்றம் சாட்டினர். மார்க்சிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர், 'இவர்கள் ஏதோ பொற்கால ஆட்சி நடத்துவதாக நினைத்துக் கொண்டிருக்கின்றனர்' என்று கிண்டல் செய்யும் அளவுக்கு திமுக ஆட்சியின் மீது பல விமர்சனங்கள் இருந்தன.இருந்தாலும், முதல்வர் ஸ்டாலின் அவற்றை கண்டு கொள்ளவில்லை. மக்கள் தன்னை அப்பா அப்பா என்று அன்போடு அழைப்பதாக பெருமிதமாக கூறிக் கொண்டார்.

எந்த வேலையும் செய்யாமல், சென்னைக்குள் கார் பந்தயம் நடத்தி மக்களுக்கு தொல்லை கொடுத்த உதயநிதி சிறப்பாக செயல்படுவதாக பாராட்டுப் பத்திரம் வேறு வாசித்தார். இப்படி பல முனையிலும் தோல்வி கண்ட திமுக அரசுக்கு, இந்த தேர்தலில் மக்கள் பாடம் கற்பித்துள்ளனர்.
புதிதாக தொடங்கப்பட்ட விஜய்யின் தவெக ஆட்சியை கைப்பற்றுகிறது. கட்சி தோல்விமுகத்துக்கு சென்றதை தொடர்ந்து திமுக தலைமை அலுவலகமான அண்ணா அறிவாலயம் வெறிச்சோடியது. கூடியிருந்த தொண்டர்கள், சோகத்துடன் கலைந்து சென்றனர்.

Advertisement