கடனை செலுத்தியவர் மீது வழக்கு: ரூ.60,000 இழப்பீடு வழங்க உத்தரவு

கோவை:கோவை, குரும்பபாளையம் அருகேயுள்ள வலியாம்பாளையத்தை சேர்ந்தவர் பாலமுருகன். ஐடிஎப்சி பர்ஸ்ட் பேங்கில் 2021, செ ப்., 28 ல், 6.70 லட்சம் ரூபாய் வணிக கடன் வாங்கினார். வட்டியுடன் சேர்த்து 9.66 லட்சம் ரூபாய் கடனை திரும்ப செலுத்தினார்.

இதற்கான நிலுவையில்லா சான்றிதழ் நிறுவனம் சார்பில், 2025, மே 23 ல் பாலமுருகனுக்கு வழங்கப்பட்டது. ஒரு மாதத்திற்கு பிறகு மேலும் நிலுவை தொகை இருப்பதாக நோட்டீஸ் வந்தது. அதிர்ச்சியடைந்த அவர், கடன் தொகை முழுவதும் செலுத்திய பிறகும், நிலுவை தொகை நோட்டீஸ் அனுப்பியது சட்ட விரோதம் என்று பதில் நோட்டீஸ் அனுப்பினார்.

அதன்பிறகும் மாஜிஸ்திரேட் கோர்ட்டில் பாலமுருகன் மீது, வங்கி தரப்பில் வழக்கு தாக்கல் செய்தனர். இதனால் கோர்ட்டில் ஆஜராகுமாறு சம்மன் வந்தது. உடனடியாக வங்கி நிர்வாகத்தை தொடர்பு கொண்டு, வழக்கை வாபஸ் பெறுமாறு கோரினார். வழக்கு வாபஸ் பெறப்படவில்லை. அவருக்கு பிடிவாரன்ட் பிறப்பிக்கப்பட்டது.

மன வேதனை அடைந்த பாலமுருகன் இழப்பீடு வழங்க கோரி, கோவை கூடுதல் நுகர்வோர் குறைதீர் ஆணையத்தில் வழக்கு தாக்கல் செய்தார். விசாரித்த ஆணைய தலைவர் தட்சிணாமூர்த்தி பிறப்பித்த உத்தரவில், ''எதிர்மனுதாரர் சேவை குறைபாடு செய்துள்ளதால் மனுதாரருக்கு ஏற்பட்ட மன உளைச்சலுக்கு இழப்பீடாக 50,000 ரூபாய், வழக்கு செலவு, 10,000 ரூபாய் வழங்க வேண்டும்'' என்று தெரிவித்துள்ளார்.

Advertisement