துாய்மை இயக்கப் பணி கூடுதல் கலெக்டர் ஆய்வு

விழுப்புரம்: விழுப்புரம் அடுத்த கண்டம்பாக்கம் கிராமத்தில், துாய்மை இயக்கப் பணிகளை கூடுதல் கலெக்டர் ஆய்வு மேற்கொண்டார்.

விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள 688 ஊராட்சிகளிலும், திடக்கழிவு மேலாண்மைத் திட்டத்தில், கிராம துாய்மைப் பணியாளர்கள் மூலம் குப்பைகள் சேகரித்து, தரம் பிரித்து அகற்றும் பணிகள் நடந்து வருகிறது. இதற்காக கிராமங்கள் தோறும் துாய்மை பணியாளர்கள், அவர்களுக்கான உபகரணங்கள், குப்பை ஏற்றும் வாகனங்கள் வழங்கப்பட்டு பணிகள் நடந்து வருகிறது.

இந்நிலையில், கோலியனுார் ஒன்றியம், கண்டம்பாக்கம் கிராமத்தில், துாய்மைப் பணி திட்டத்தை, மாவட்ட ஊரக வளர்ச்சித்துறை கூடுதல் கலெக்டர் பத்மஜா நேற்று ஆய்வு செய்தார்.

வீடுகள், சாலைகள், கடைகளை பார்வையிட்டு, தினசரி குப்பைகள் சேகரிக்கும் பணிகள் குறித்து அங்குள்ள மக்களிடம் கேட்டறிந்தார். அப்போது, கிராமத்தில் தினசரி குப்பைகளை அகற்றி துாய்மையாக பராமரிக்க வேண்டும். மக்கும், மக்காத குப்பைகளை தரம்பிரித்து எடுக்க வேண்டும்.

ஒரே இடத்தில் சாலையில் குப்பைகளைக் கொட்டக்கூடாது, வீடுகள், ஓட்டல் கடைகளில் தரம் பிரித்து குப்பையை கொடுக்க வேண்டும், கண்ட இடங்களில் குப்பையை வீசக்கூடாது, சேகரிக்கும் குப்பைகளை துாய்மைப் பணியாளர்கள் விதிகள்படி பாதுகாப்பாக அகற்ற வேண்டும் என அறிவுரை வழங்கினார்.

ஆய்வின்போது, வட்டார வளர்ச்சி அலுவலர் சுபாஷ், துாய்மை பாரத இயக்க மாவட்ட ஒருங்கிணைப்பாளர் சங்கர், ஊராட்சி தலைவர் தனசேகரன், துணைத் தலைவர் பிருந்தாவதி, வட்டார ஒருங்கிணைப்பாளர் சுந்தரி, பிரியா, கிராம ஊக்குநர்கள் புஷ்பராணி, கங்கா மற்றும் துாய்மை காவலர்கள் உடனிருந்தனர்.

Advertisement