பல்லாரி காங்., கவுன்சிலர் கணவரால் அரசு நிலம் ஆக்கிரமித்து விற்பனை

பல்லாரி: மாநகராட்சி பெண் கவுன்சிலரின் கணவர், அரசு நிலத்தை ஆக்கிரமித்து, ஏழைகளுக்கு விற்று மோசடி செய்துள்ளார். இவரிடம் நிலம் வாங்கி, வீடு கட்டியவர்கள் நெருக்கடியில் சிக்கியுள்ளனர்.

பல்லாரி மாநகராட்சியின் காங்கிரஸ் கவுன்சிலர் உமாதேவி. இவரது கணவர் சிவராஜ். இவர் ஏழைகளுக்கு குறைந்த விலையில், மனை வழங்குவதாக மக்களை நம்ப வைத்தார்.

இதற்காக, பல்லாரியின் பூதிஹாளாவில் சர்வே எண் 125ல் உள்ள, அரசுக்கு சொந்தமான 7.87 ஏக்கர் நிலத்தை ஆக்கிரமித்தார்.

இந்த நிலத்தில் லே - அவுட் அமைத்து, ஏழை மக்களுக்கு ஒன்றரை லட்சம் ரூபாய் முதல் இரண்டு லட்சம் ரூபாய்க்கு மனைகளை விற்றார். இது அரசு நிலம் என்பதை அறிந்த பலரும், மனை வாங்க தயங்கினர்.

அப்போது சிவராஜ், 'மாநிலத்தில் எங்கள் அரசே உள்ளது. நீங்கள் பயப்பட வேண்டாம். எந்த பிரச்னையும் வராது' என உறுதியளித்து, மனைகளை வாங்க வைத்தார்.

அவரிடம் வாங்கிய மனையில் மக்கள், கடன் வாங்கி வீடு கட்டி வசிக்கின்றனர். இப்போது ஆக்கிரமிப்பு நிலத்தில், வீடு கட்டியிருப்பதை பல்லாரி மாவட்ட நிர்வாகம் கண்டுபிடித்துள்ளது. வீடுகளை இடிக்கும் நடவடிக்கையை துவக்கியுள்ளது.

பணத்தை இழந்து, வீட்டையும் இழக்கும் நிலை ஏற்பட்டதால், மனம் நொந்த ஏழை குடும்பங்கள், பல்லாரி நகர் போலீஸ் நிலையத்தில், நேற்று புகார் அளித்தனர். தங்களுக்கு மோசடி செய்த சிவராஜ் மீது, நடவடிக்கை எடுக்கும்படி வேண்டினர்.

மனைகளை விற்று, பணம் பெற்ற போது, சிவராஜ் ரசீது ஏதும் தரவில்லை. சிலர் முன் யோசனையுடன், அவருக்கு பணம் கொடுத்ததை தங்களின் மொபைல் போனில், வீடியோ எடுத்து வைத்திருந்தனர். அதை போலீசாரிடம் காண்பித்து உள்ளனர்.

Advertisement