வேலுமணி அழைப்பை தவிர்த்த அமித்ஷா

12


சென்னை: சட்டசபை தேர்தலுக்கு முன், தமிழகத்திற்கு மத்திய அமைச்சர்கள் படையெடுத்து வந்தனர். பிரசாரத்தின் போது, பா.ஜ.,வின் மற்ற மாநில முதல்வர்களும் தமிழகத்தில் முகாமிட்டிருந்தனர். ஆனால், தேர்தல் முடிவுகள் வெளியாகி த.வெ.க., ஆட்சியை பிடித்த பின், பா.ஜ., தலைமை அமைதியாகி விட்டது. தமிழகத்தின் மீது சிறப்பு கவனம் செலுத்திய பா.ஜ., தலைமை மவுனமாக இருப்பது ஏன்?

'தி.மு.க., அரசு தோற்க வேண்டும் என, பா.ஜ., உழைத்தது. அது நடந்து விட்டது. இப்போதைக்கு, முதல்வர் விஜய் எப்படி ஆட்சியை நடத்துகிறார் என்பதை பொறுமையாக பார்க்க வேண்டும்' என்கின்றனர் பா.ஜ., தலைவர்கள்.

அ.தி.மு.க., உட்கட்சி பூசல் குறித்தும் எதுவும் சொல்லாமல் பா.ஜ., தலைமை அமைதியாக உள்ளது. கோவை மாவட்டம் தொண்டாமுத்துார் அ.தி.மு.க., - எம்.எல்.ஏ., எஸ்.பி.வேலுமணிக்கு டில்லி பா.ஜ., தலைவர்களிடம் நல்ல பழக்கம் உண்டு. அவர், மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவை பலமுறை தொலைபேசியில் தொடர்பு கொள்ள முயற்சித்தாராம். ஆனால், அவரது அழைப்புகளை ஏற்கவில்லையாம் அமித் ஷா.

இதையடுத்து, டில்லியில் பிரதமர் மோடி மற்றும் அமித் ஷாவை சந்திக்க நேரம் கேட்டுள்ளார் வேலுமணி. 'இன்னும் ஒரு மாதத்திற்கு எங்களை தொந்தரவு செய்ய வேண்டாம். மேற்கு வங்கம், அசாம் தேர்தலில் உழைத்து களைத்துள்ளோம். பின் பார்த்துக்கொள்ளலாம்' என, வேலுமணிக்கு தகவல் சொல்லப்பட்டதாம்.

அத்துடன், 'அ.தி.மு.க.,வில் அனைவரும் ஒற்றுமையாக இருக்க வேண்டும். பழனிசாமி சொல்வதை கேளுங்கள்' என்றும், பா.ஜ., தலைமை வேலுமணியிடம் தெரிவித்துள்ளதாம். தேர்தலில் தோல்வி அடைந்தாலும், அ.தி.மு.க., - பா.ம.க., இன்னும் தங்கள் கூட்டணியில் தொடர்வதால், பா.ஜ., மகிழ்ச்சியில் உள்ளதாம்.

கருத்துக்கள் சொல்ல; ndussh@dinamalar.in

Advertisement