கடல் வழியாக கடத்தி வரப்பட்ட ரூ.1,150 கோடி கோகைன்; குஜராத்தில் பறிமுதல்

8

காந்திநகர்: குஜராத்தின் முந்த்ரா கடற்பகுதியில் சட்டவிரோதமாக கடத்தி வரப்பட்ட ரூ.1,150 கோடி மதிப்பிலான கோகைன் போதைப்பொருள் பறிமுதல் செய்யப்பட்டது.

இந்திய கடலோர காவல்படை மற்றும் குஜராத் தீவிரவாத தடுப்புப் பிரிவு இணைந்து நடத்திய கூட்டு நடவடிக்கையில் இந்த மிகப்பெரிய போதைப்பொருள் கடத்தல் சம்பவம் முறியடிக்கப்பட்டுள்ளது. தீவிரவாத தடுப்புப் பிரிவினருக்கு கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில், முந்த்ரா கடற்கரைக்கு அருகே நேற்று (மே 26) மற்றும் நேற்று முன்தினம் (25) சோதனை மேற்கொள்ளப்பட்டது.

முந்த்ரா கடற்கரையில் நங்கூரமிட்டிருந்த 'எம்.வி ஐரோப்பா' என்ற சரக்குக் கப்பலில் இருந்து சில பைகள் கடலில் தூக்கி வீசப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டது. உடனே கடலோர காவல்படை மற்றும் தீவிரவாத தடுப்புப் பிரிவினர் அந்த இடத்திற்கு விரைந்து சென்று, கடலில் மிதந்த ஐந்து பைகளை வெற்றிகரமாக மீட்டனர். அதில், சட்டவிரோதமாக கடத்தி வரப்பட்ட 115 கிலோ கோகைன் போதைப்பொருள் எனத் தெரிய வந்தது. இதன் மதிப்பு சுமார் ரூ.1,150 கோடியாகும்.

போதைப்பொருள் வீசப்பட்ட சரக்குக் கப்பல் மேல் விசாரணைக்காகத் தற்போது துறைமுகத்திற்குக் கொண்டு வரப்பட்டுள்ளது. போதைப்பொருள் கடத்தல் சம்பவம் தொடர்பாக கூட்டு விசாரணை நடைபெற்று வருகிறது.

Advertisement