லாஸ் ஏஞ்சலெஸ் மேயர் தேர்தல்; தமிழ்ப்பெண் நித்யா போட்டி

6


வாஷிங்டன்: அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சலெஸ் மேயர் தேர்தலில் இந்திய வம்சாவளியை சேர்ந்த தமிழ்ப்பெண் நித்யா ராமன், 44, போட்டியிடுகிறார். நவம்பரில் நடக்கும் தேர்தலில் தற்போதைய மேயருடன் மோதுகிறார்.

கேரளத்தைச் சேர்ந்த தமிழ் குடும்பத்தில் 1981ம் ஆண்டு நித்யா ராமன் பிறந்தார். இவருக்கு வயது 44. இவருக்கு 6 வயது இருக்கும்போது, இவரது பெற்றோர் அமெரிக்காவுக்கு குடிபெயர்ந்தனர். இவர் ஹார்வர்டு பல்கலையில் அரசியலும், மசாசூசட்ஸ் பல்கலையில் நகரத் திட்டமிடலும் பயின்றுள்ளார். சென்னையில் துப்புரவு மற்றும் சுகாதார மேம்பாட்டு நிறுவனத்தை தொடங்கி சில காலம் பணியாற்றி இருக்கிறார். ஜனநாயகக் கட்சியை சேர்ந்த இவர், தன்னை ஜனநாயக சோஷலிசவாதியாகவும் அடையாளப்படுத்திக் கொண்டுள்ளார்.

பிரைமரி எனப்படும் ஆரம்ப கட்ட தேர்தலில் முதல் இரு இடங்களை பெறும் வேட்பாளர்கள், அடுத்த கட்டமாக நடக்கும் மேயர் தேர்தலில் நேரடியாக மோதுவர். ஜூன் 2ல் நடந்த தேர்தலில் இரண்டாமிடம் பெற்ற நித்யா ராமன், நவம்பரில் நடக்கும் தேர்தலில் தற்போதைய மேயர் கரேன் பாஸ் உடன் (முதலிடம் பெற்றவர்) மோதுகிறார்.

நித்யா ராமன், 2020ல் லாஸ் ஏஞ்சலெஸ் நகர மன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் தெற்காசிய பெண் என்ற சாதனை படைத்தார். மேயர் தேர்தலுக்கான வேட்பாளராக தேர்வு செய்யப்பட்டது பற்றி நித்யா ராமன் சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது: லாஸ் ஏஞ்சல்ஸ் மேயர் பதவிக்கான பொதுத் தேர்தலில் போட்டியிடும் வாய்ப்பை வாக்காளர்கள் தனக்கு வழங்கியிருப்பது மிகுந்த பெருமை அளிக்கிறது.

நகரம் முழுவதும் வீடு வீடாகச் சென்று ஆதரவு திரட்டிய, தொலைபேசி அழைப்புகள் விடுத்த, குறுஞ்செய்திகள் அனுப்பிய, நன்கொடைகள் வழங்கிய ஆயிரக்கணக்கான ஆதரவாளர்களுக்கும், இந்தத் தருணத்தில் நன்றி தெரிவிக்கிறேன். நாற்பது லட்சம் மக்கள் வசிக்கும் லாஸ் ஏஞ்சலெஸ் எதிர்கொள்ளும் முக்கியப் பிரச்னைகளாக உள்ள சீர்கெட்ட தற்போதைய நிலையை மாற்று மாற்றுவேன். இவ்வாறு நித்யா ராமன் தெரிவித்துள்ளார்.

இவர் மேயர் தேர்தலில் வெற்றி பெற்றால், அமெரிக்காவின் மிகப்பெரிய நகரங்களான நியூயார்க் மற்றும் லாஸ் ஏஞ்சல்ஸ் ஆகிய இரண்டையும் இந்திய-அமெரிக்க அரசியல்வாதிகள் நிர்வகிப்பார்கள். கடந்த நவம்பரில் நடந்த தேர்தலில்,மம்தானி ஒரு பெரிய வெற்றியைப் பெற்று நியூயார்க் மக்களின் ஆதரவைப் பெற்றார்.

Advertisement