திருவாலங்காடு வடாரண்யேஸ்வரர் கோவிலில் வியாபாரிகள் தொல்லையால் பக்தர்கள் அதிருப்தி

திருவாலங்காடு: திருவாலங்காடு வடாரண்யேஸ்வரர் கோவில் நுழைவாயிலில், கீரை, காய்கறிகள் விற்கும் உள்ளூர் வியாபாரிகள், பொருட்களை வாங்கக்கூறி தொல்லை செய்வதால், பக்தர்கள் அதிருப்தி அடைந்துள்ளனர்.

திருத்தணி சுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலின் உபகோவிலான வடாரண்யேஸ்வரர் கோவில், திருவாலங்காடில் அமைந்துள்ளது.

இந்த கோவிலுக்கு சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் மற்றும் வெளிமாநிலங்களில் இருந்து, தினமும் 1,000த்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் வந்து, சுவாமியை தரிசித்து செல்கின்றனர்.

இந்நிலையில், இந்த கோவில் வளாகத்தில் உள்ள கோசாலை எனும் கால்நடைகளை பாதுகாக்கும் மையத்தில், 40க்கும் மேற்பட்ட பசுக்கள் பராமரிக்கப்பட்டு வருகின்றன.

அந்த பசுக்களுக்கு உணவாக வழங்கும் அருகம்புல் மற்றும் காய்கறிகளை, கோவில் வாசலில் வைத்து, உள்ளூர் வியாபாரிகள் விற்பனை செய்து வருகின்றனர்.

தற்போது, கோவிலுக்கு வரும் வெளியூர் பக்தர்களிடம், கட்டாயமாக அருகம்புல் அல்லது காய்கறியை வாங்க வேண்டும் என, வியாபாரிகள் தொந்தரவு செய்வதால், பக்தர்கள் எரிச்சல் அடைகின்றனர். பொருட்களை வாங்க மறுக்கும் பக்தர்களை, தகாத வார்த்தைகளால் வசைபாடுவதை வாடிக்கையாக வைத்துள்ளனர்.

நேற்று முன்தினம் கோவிலுக்கு சென்னையில் இருந்து வந்த பக்தகர்கள், கீரை, காய்கறிகளை வாங்காததால், வழக்கம் போல வியாபாரிகள் ஆபாச வார்த்தைகளால் திட்டியுள்ளனர்.

இதனால் மனம் நொந்த பக்தர்கள், அவர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். கோவில் நிர்வாகம் மற்றும் காவல் துறையினர் வந்து சமரசம் செய்தனர். பின், கோவில் வளாகத்தில் பக்தர்களை தொந்தரவு செய்யக் கூடாது என, வியாபாரிகளை போலீசார் எச்சரித்தனர்.

இருப்பினும், உள்ளூர் வியாபாரிகள் தொடர்ந்து பக்தர்களை தொந்தரவு செய்து, கோவில் வளாகத்தில் விற்பனை செய்து வருகின்றனர். இதனால், பக்தர்கள் மன உளைச்சலுக்கு ஆளாவதாக வேதனை தெரிவிக்கின்றனர். இதுகுறித்து, திருத்தணி கோவில் நிர்வாகம் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, பக்தர்கள் எதிர்பார்க்கின்றனர்.

Advertisement