பிளாஸ்டிக் ஒழித்து நீர்நிலைகளை காக்க வேண்டும் : தமிழக அரசிடம் சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் எதிர்பார்ப்பு

கோவை: ஒருமுறை பயன்படுத்தும் பிளாஸ்டிக் பயன்பாட்டை ஒழிக்கவும், நீர்நிலைகளை காக்கவும் தமிழக அரசு கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்.

ஒரு முறை மட்டும் பயன்படுத்தக் கூடிய பிளாஸ்டிக் டம்ளர், தண்ணீர் பாக்கெட், கவர் உள்ளிட்ட 14 வகையான பொருட்கள் பயன்பாட்டை ஒழிக்க, அ.தி.மு.க. ஆட்சியில் கடைகளில் சோதனை நடத்தி, பறிமுதல் செய்தனர்; அபராதம் வசூலித்தனர். ஓரளவு கட்டுப்படுத்தப்பட்டது. பிளாஸ்டிக் கவர், டம்ளர் விற்கவே கடைக்காரர்கள் அச்சப்பட்டனர். டாஸ்மாக் பார்களில் கூட பயன்படுத்த தயங்கினர்.



மீண்டும் மஞ்சள் பை தி.மு.க. ஆட்சியில் பிளாஸ்டிக் பயன்பாடு மீண்டும் துவங்கியது. 'மீண்டும் மஞ்சள் பை' திட்டம் அமல்படுத்தியது. ஒரு பை 10 ரூபாய்க்கு விற்கப்பட்டது.

ஆங்காங்கே தானியங்கி இயந்திரங்கள் வைக்கப்பட்டன. பராமரிப்பின்றி நாளடைவில் அவை முடங்கின. அத்திட்டம் 'பப்ளிசிட்டி'க்காக மட்டுமே பயன்பட்டது.

நடவடிக்கை இல்லாததால் வாரச்சந்தை கூடுமிடங்கள், மார்க்கெட்டுகள், மெஸ், ஹோட்டல்கள், இறைச்சி கடைகள், தள்ளுவண்டி கடைகள், பூக்கடைகள், மதுக்கடை பார்கள் உள்ளிட்ட அனைத்து கடைகளிலும் பிளாஸ்டிக் பொருட்கள் பயன்பாடு சாதாரணமாக காணப்படுகிறது.

உணவுப் பொருட்கள் பார்சலுக்கு பிளாஸ்டிக் கவர் பயன்படுத்துவது வாடிக்கையாகி விட்டது. சில மெஸ்களில் வாழை இலைக்கு பதிலாக பிளாஸ்டிக் ஷீட் பயன்டுத்தும் அளவுக்கு நிலைமை மோசமாகி வருகிறது.

பயன்படுத்திய பின் துாக்கி வீசப்படும் அக்கழிவுகள், சாக்கடை கால்வாயிலும், நீர் நிலைகளிலும் தேங்குகின்றன. நாளடைவில் அடைப்பு ஏற்பட்டு, பாதாள சாக்கடை பொங்குகிறது; வாய்க்காலில் இருந்து கழிவு நீர் ரோட்டில் ஓடுகிறது. நீர் நிலைகளுக்கு செல்லும் தண்ணீரில் பிளாஸ்டிக் கழிவு மிதப்பதை பார்க்க முடிகிறது.



கோட்டை விட்டது தி.மு.க. அ.தி.மு.க. ஆட்சியில் செய்ததை தி.மு.க. கோட்டை விட்டது எனலாம். இன்று மதுக்கடை பார்களில் துவங்கி, தள்ளுவண்டி பேல்பூரி கடை வரை பிளாஸ்டிக் பயன்பாடு இருக்கிறது.

மண்ணை மலடாக்கும் பிளாஸ்டிக் பொருட்களை உற்பத்தி செய்யவோ விற்கவோ, பயன்படுத்தவோ கூடாது என்கிற உத்தரவை மீண்டும் அமல்படுத்த வேண்டும்.

தடையை மீறி கடைக்காரர்கள் விற்றால், தொழில் உரிமத்தை ரத்து செய்ய வேண்டும். பயன்படுத்துவோரிடம் பறிமுதல் செய்து பெரிய தொகை அபராதம் வசூலிக்க வேண்டும்.

பிளாஸ்டிக் பொருட்கள் பயன்பாட்டை ஒழித்து விட்டால், நீர்நிலைகள் பாதுகாக்கப்படும். பருவ மழை பெய்யும்போது சுத்தமான தண்ணீரை தேக்க முடியும். நிலத்துக்குள் தண்ணீர் இறங்கி, நீர் மட்டம் உயரும்.

எனவே பிளாஸ்டிக் ஒழிப்பு முயற்சிகளில் உள்ளாட்சி அமைப்புகள் தீவிரமாக இறங்க வேண்டும் என்பதே, சுற்றுச்சூழல் ஆர்வலர்களின் எதிர்பார்ப்பாக இருக்கிறது.

@block_B@ 'அரசு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்' கவுசிகா நீர் கரங்கள் அமைப்பு நிறுவனர் செல்வராஜ் கூறுகையில், ''அத்தியாவசிய தேவையை தவிர, மற்ற பயன்பாட்டுக்கான பிளாஸ்டிக் பொருட்கள் உற்பத்தியை தடை செய்ய வேண்டும். 50 மைக்ரானுக்கு கீழுள்ள பொருட்களை பறிமுதல் செய்தனர்; பின்னாளில் விட்டு விட்டனர். மாற்றுப்பொருட்கள் அமல்படுத்தி, மக்களிடம் அரசு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். ஹோட்டல்களில் சாம்பார், ரசம், குருமா, காபி, டீ கொடுக்க பிளாஸ்டிக் கவர் பயன்படுத்துவதை தடுக்க வேண்டும்,'' என்றார்.block_B

Advertisement