மாமல்லை சாலை சந்திப்பில் சாலை தடுப்புகளால் இடையூறு

மாமல்லபுரம்: மாமல்லபுரம் முக்கிய சந்திப்பில் போக்குவரத்திற்கு இடையூறாக சாலை தடுப்பு மற்றும் கண்காணிப்பு கோபுரம் அமைக்கப்பட்டுள்ளதால், வாகன ஓட்டிகள் அவதிப்படுகின்றனர். மாமல்லபுரம் பேருந்து நிலைய பகுதியில், கிழக்கு ராஜ வீதி, தென்மாட வீதி உள்ளிட்ட சாலைகள் இணைந்து முக்கிய சந்திப்பாக உள்ளது. வார இறுதி, விடுமுறை நாட்களில் சுற்றுலா வாகனங்கள் குவியும்போது, இச்சந்திப்பில் கடும் நெரிசலுடன் வாகனங்கள் கடந்து செல்கின்றன.

இச்சந்திப்பில், சாலை தடுப்புகள், போக்குவரத்து போலீசாரின் கண்காணிப்பு கோபுரம் ஆகியவை நிரந்தரமாக அமைக்கப்பட்டு, மேலும் நெரிசலுக்கு வழிவகுப்பதாக, வாகன ஓட்டிகள் தெரிவிக்கின்றனர்.

கடந்த ஆண்டிற்கு முன், தென்மாட வீதியில் இருந்து, கிழக்கு ராஜ வீதிக்கு, வாகனங்கள் இடையூறின்றி எளிதாக திரும்பின. போக்குவரத்தை ஒழுங்குபடுத்த கருதி, தென்மாடவீதில் இருந்து திரும்பும் இடத்தில், ஓராண்டிற்கு முன், சாலை தடுப்புகள் மற்றும் கண்காணிப்பு கோபுரம் ஆகியவற்றை, போலீசார் அமைத்தனர்.

குறுகிய வளைவில், வாகனம் எளிதாக திரும்பிய நிலை மாறி, திரும்புவதற்கு கடும் சிரமப்பட்டும் சாலை தடுப்பில் மோதும் அபாயத்துடனும் செல்கின்றன.

எனவே, சாலை தடுப்புகள், கண்காணிப்பு கோபுரம் ஆகியவற்றை அகற்றி அங்கு வேறு ஆக்கிரமிப்புகள் ஏற்படாதவாறும், நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வாகன ஓட்டிகள் வலியுறுத்துகின்றனர்.

Advertisement