சொத்து வரி உயர்வை கண்டித்து அ.தி.மு.க., அக்.,8ல் மனித சங்கிலி!

3



சென்னை: சொத்து வரி உயர்வை உடனடியாக திரும்ப பெற வலியுறுத்தி அக்டோபர் 8ம் தேதி மனிதசங்கிலி போராட்டம் நடத்தப்படும் என்று அ.தி.மு.க., அறிவித்துள்ளது.


இதுகுறித்து அக்கட்சியின் பொதுச்செயலாளர் இ.பி.எஸ்., வெளியிட்டுள்ள அறிக்கை:

தமிழகத்தில் தி.மு.க., எப்போதெல்லாம் ஆட்சிக்கு வருகிறதோ அப்போதெல்லாம், பொதுமக்கள் வெளியில் நடமாட முடியாத அளவுக்கு சட்டம்-ஒழுங்கு சீர்கேடு; விண்ணை முட்டும் விலைவாசி உயர்வு; வியாபாரிகள் தங்களது வணிகத்தை சுதந்திரமாக நடத்த முடியாத நிலை;
ஆட்சியாளர்களின் அதிகார துஷ்பிரயோகம்; தி.மு.க.,வினர் சட்ட விரோதச் செயல்களில் ஈடுபடுவது; ஆளும் தி.மு.க.,வினரால் சினிமா துறை கபளீகரம்; ரியல் எஸ்டேட் தொழில்களில் அதிகாரம் செலுத்துவது என பல்வேறு மக்கள் விரோதச் செயல்கள் நடைபெறுவது எழுதப்படாத சட்டமாகிவிட்டது.
தமிழகத்தில் தி.மு.க., ஆட்சியாளர்களால் மக்கள் படும் வேதனைக்கு அளவே இல்லை. இத்தகைய கொடுங்கோல் ஆட்சி நடத்தும் ஸ்டாலினின் தி.மு.க., அரசுக்கு கடும் கண்டனங்களை தெரிவித்துக் கொள்கிறேன்.

மக்கள் நலன் ஒன்றை மட்டுமே குறிக்கோளாகக் கொண்டு செயல்பட்டு வரும் அ.தி.மு.க, தி.மு.க., ஆட்சியில் நடைபெறும் பல்வேறு ஊழல்கள் மற்றும் முறைகேடுகளை அவ்வப்போது நாட்டு மக்களுக்கு வெளிச்சம் போட்டுக் காட்டி வருவதோடு, களத்தில் நின்று போராடி வருகிறது.

ஸ்டாலினின் தி.மு.க., அரசு கடந்த 40 மாதகால ஆட்சியில்;

* மூன்று முறை மின்கட்டண உயர்வுடன், இனி ஆண்டுதோறும் மின் கட்டணம் உயர்த்தப்படும் என்ற அறிவிப்பு,

*பத்திரப் பதிவு கட்டணங்கள் உட்பட அரசின் அனைத்துக் கட்டணங்களும் பல மடங்கு உயர்வு;

*பால் பொருட்கள் விலை பலமுறை உயர்வு மற்றும் அத்தியாவசிய உணவுப் பொருட்களின் விலை உயர்வு;

*நியாய விலைக் கடைகளில் குறித்த நேரத்தில் பொருட்கள் வழங்கப்படாமை;

*கொலை, கொள்ளை என்று தொடர்ந்து சட்டம்-ஒழுங்கு சீர்கேடு; பெண்கள், சிறுமியருக்கு எதிராக அதிகரித்து வரும் பாலியல் வன்கொடுமைகள்;

*போதைப் பொருட்களின் கேந்திரமாக மாறிய தமிழகம்;

*சென்னை மாநகராட்சியில், மயான பூமியை தனியார் மயமாக்கும் முடிவு,

*ஏற்கெனவே உயர்த்தப்பட்ட 100 சதவீதம் மற்றும் 150 சதவீதம் சொத்து வரி உயர்வுடன் இனி ஆண்டுதோறும் 6 சதவீதம் சொத்து வரி கட்டணம் உயர்த்தப்படும் என்ற அறிவிப்பு; இதனால் குடிநீர் மற்றும் கழிவு நீர் இணைப்புக் கட்டணங்கள் ஆண்டு தோறும் உயர்த்தப்படும் நிலை என்று தமிழக மக்களின் வாழ்க்கையை ஒட்டுமொத்தமாக சீரழித்து வருகிறது.

ஸ்டாலினின் தி.மு.க., ஆட்சியில், மக்களுக்குத் தேவையான அடிப்படை வசதிகளை செய்து கொடுக்காமல் இதுவரை இல்லாத வகையில் ஆண்டுதோறும் 6 சதவீத சொத்து வரி உயர்வு என்ற பேரிடி மக்கள் தலையில் சுமத்தப்பட்டுள்ளது. இதன் காரணமாக அடித்தள மற்றும் நடுத்தர மக்களின் வாழ்வாதாரம் பெரிதும் பாதிக்கப்படும்.

ஸ்டாலினின் தி.மு.க., ஆட்சியின் கொடுமை பொறுக்க முடியாமல் மக்கள் வடிக்கும் கண்ணீர் இந்த ஆட்சியை அழிக்கும் ஆயுதமாகும் நாள் வெகு தூரத்தில் இல்லை. 40 மாத காலமாக, மக்கள் பல்வேறு இன்னல்களை சந்தித்து வருவதற்குக் காரணமான ஸ்டாலினின் தி.மு.க., அரசைக் கண்டித்தும்; மக்கள் நலன் கருதி, உயர்த்தப்பட்ட சொத்து வரியை உடனடியாக திரும்பப் பெற வலியுறுத்தியும் அ.தி.மு.க., சார்பில், அக்.8 (செவ்வாய் கிழமை) காலை 10.30 மணியளவில், தமிழகத்தில் உள்ள அனைத்து மாநகராட்சிகளுக்கு உட்பட்ட வட்டங்களிலும்; நகராட்சிகள் மற்றும் பேரூராட்சிகளிலும், மாபெரும் மனித சங்கிலிப் போராட்டம் நடைபெறும்.

இவ்வாறு அந்த அறிக்கையில் இ.பி.எஸ்., கூறி உள்ளார்.

Advertisement