சிறுத்தையை கொன்ற 3 பேரிடம் கார், ஜீப், துப்பாக்கிகள் பறிமுதல்

2

மேட்டூர் : சிறுத்தையை கொன்ற, மூவரை கைது செய்த வனத்துறையினர், கார், ஜீப், நாட்டு துப்பாக்கிகளை பறிமுதல் செய்தனர்.


சேலம் மாவட்டம், வெள்ளக்கரட்டூர் முனியப்பன் கோவில் அருகே, கடந்த, 27ல், நான்கு வயது ஆண் சிறுத்தை அழுகிய நிலையில் இறந்து கிடந்தது.


வனத்துறையினர் விசாரணையில், சிறுத்தையை நாட்டு துப்பாக்கியால் சுட்டும், அடித்தும் கொன்றது தெரிந்தது. இதுதொடர்பாக, தின்னப்பட்டி ஊராட்சி முன்னாள் தலைவர் முனுசாமி, 49, பெரியகொட்டாய் மீனவர், ராஜா, 54, குப்பண்ணகவுண்டர் தெரு வாழைக்காய் வியாபாரி சசிகுமார், 45 ஆகியோரை, மேட்டூர் வனத்துறையினர் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து கார், ஜீப், இரு நாட்டு துப்பாக்கிகளை பறிமுதல் செய்தனர்.


வனத்துறையினர் கூறுகையில், 'கடந்த, 24 இரவு பாதுகாப்பு பணியில் ஈடுபட்ட வனத்துறையினர், 'ஷிப்ட்' முடிந்து சென்ற நிலையில் அடுத்த ஷிப்ட் ஊழியர்கள் பணிக்கு வர இருந்தனர்.


அந்த இடைவெளியில் நாட்டு துப்பாக்கியால் சிறுத்தையை சுட்டுள்ளனர். சிறுத்தை தப்பி ஓடி புதரில் மறைந்ததால் அடித்துக் கொன்றது விசாரணையில் தெரிந்தது' என்றனர்.

Advertisement