டில்லியில் டாக்டர் சுட்டுக்கொலை; சிகிச்சைக்கு வந்த இருவர் வெறிச்செயல்

4

புதுடில்லி: தலைநகர் டில்லியின் ஜெய்த்பூர் பகுதியில் மருத்துவமனையில் பணியில் இருந்த ஜாவித் அக்தர் என்ற டாக்டர் சுட்டுக்கொலை செய்யப்பட்டார். சிகிச்சைக்கு வந்த வாலிபர்கள் வெறிச்செயலில் ஈடுபட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


டில்லியின் ஜெய்த்பூர் பகுதியில் நிமா மருத்துவமனையில் டாக்டர் ஜாவித் அக்தர் பணியில் இருந்தார். சிகிச்சைக்காக வந்த இருவர் டாக்டர்களை சந்திக்க அனுமதி கோரினர். அனுமதி கிடைத்ததும் உள்ளே சென்ற வாலிபர்கள், அங்கிருந்த டாக்டர் ஜாவித்தை சுட்டுக்கொலை செய்தனர். இந்த சம்பவம் அங்கிருந்து அனைவரையும் கடும் அதிர்ச்சி அடையச் செய்தது. வாலிபர்கள் இருவரும் தப்பி ஓடிவிட்டனர்.


டில்லி போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். மருத்துவமனை வளாகத்தில் இருந்த சி.சி.டி.வி., காட்சிகளை போலீசார் கைப்பற்றி, விசாரணையை துவக்கினர். சமீபத்தில், கோல்கட்டாவில் ஆர்.ஜி.கர் மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனையில் பயிற்சி டாக்டர் கற்பழிக்கப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.


நாடு முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியது. நீதி கேட்டு டாக்டர்கள் வீதியில் இறங்கி போராடி வருகின்றனர். இந்த சூழலில், தலைநகர் டில்லியில் டாக்டர் ஒருவர் கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Advertisement