கங்கனா பற்றி திடுக்கிடும் தகவல்கள்; பிரபல பாடகர் வெளியிட்ட சீக்ரெட்
சண்டிகர்; பிரபல நடிகையும், பா.ஜ., எம்.பி.,யுமான கங்கனா ரனாவத் எனது காரில் மது அருந்தி,போதை பொருள் உட்கொண்டார் என்று பிரபல பாடகர் ஜஸ்பிர் ஜஸ்சி பரபரப்பு தகவலை வெளியிட்டு உள்ளார்.
சர்ச்சைகளுக்கு பெயர் போனவர் நடிகை மற்றும் பா.ஜ., எம்.பி., கங்கனா ரனாவத். இவரின் எமர்ஜென்சி பட விவகாரம் நாடு முழுவதும் பரவலாக பேசப்பட்டது. எப்போதும் சர்ச்சையான கருத்துகளை கூறி வம்பில் சிக்கிக் கொள்வது இவரின் வாடிக்கை. அண்மையில் பஞ்சாப் மாநிலம் போதை பொருளால் நிரம்பி வருகிறது. இளைஞர்கள் மதுவுக்கு அடிமையாகி உள்ளனர் என்று கூறி இருந்தார்.
இந் நிலையில், கங்கனா ரனாவத் செய்த சில காரியங்களை பொது வெளியில் வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறார் பிரபல பஞ்சாப் பாடகர் ஜஸ்பிர் ஜஸ்சி. உள்ளூர் தொலைக்காட்சி ஒன்றுக்கு அவர் அளித்த பேட்டி தான் இத்தனை பரபரப்புக்கும் காரணம்.
பேட்டியில் அவர் கூறி இருப்பதாவது; நடிகை கங்கனா பஞ்சாப் மாநிலத்தை குறி வைத்து பேசியதால் நான் இப்போது பேச வேண்டியதாகிவிட்டது. ஒருமுறை டில்லியில் எனது காரில் என்னுடன் அமர்ந்து மது அருந்தினார். அவரது தோழி ஒருவரும் இந்த சம்பவத்தின் போது உடன் இருந்தார்.
அளவில்லா மது அருந்திய கங்கனாவால் அப்போது நிற்க முடியவில்லை. நிதானம் இல்லாமல் இருந்தார். மதுவுடன் போதை பொருள் ஒன்றையும் அவர் சாப்பிட்டு இருந்தார். அவர் போன்று வேறு யாரேனும் போதை பொருளை சாப்பிடுவரா என்று எனக்கு தெரியாது.
பஞ்சாப் பற்றி கங்கனா தொடர்ந்து அவதூறான கருத்துகளை பேசி வருகிறார். அப்படி பேசுவதை அவர் நிறுத்த வேண்டும். இது தொடர்ந்தால் நானும் அவரை பற்றி நிறைய சொல்ல வேண்டி இருக்கும். கங்கனா ஒரு பைத்தியம். அவர் பேச்சை பொருட்படுத்த வேண்டாம்.
இவரை போன்று முட்டாள் நபர்கள் பார்லிமெண்ட் சென்று நாட்டை பற்றி சிந்தித்து முக்கிய முடிவுகளை எடுக்கின்றனர். அவரின் கருத்துகள் நாட்டுக்கே ஆபத்தானவை.
இவ்வாறு ஜஸ்பிர் ஜஸ்சி கூறினார்.