கோழிக்கோடுக்கு பதில் கோவையில் இறங்கிய துபாய் விமானம்! புரியாமல் தவித்த பயணிகள்

4

கோவை; கோழிக்கோடு செல்லவிருந்த துபாய் விமானம் ஒன்று, கோவையில் தரையிறங்கியதால் திடீர் பரபரப்பு நிலவியது.


@1brதுபாயில் இருந்து கேரள மாநிலம் கோழிக்கோடு நோக்கி ப்ளை துபாய் நிறுவனத்தைச் சேர்ந்த விமானம் ஒன்று புறப்பட்டது. இந்த விமானத்தில் 164 பயணிகள் இருந்தனர். கோழிக்கோடு விமான நிலையத்தில் தரையிறங்க விமானம் தயாரானது. அப்போது வானிலை மிகவும் மோசமாக இருந்தது. அதன் காரணமாக அரைமணி நேரமாக அந்த விமானம் வானிலேயே வட்டம் அடித்தது.


வானிலை சீராகாமல் இருந்ததால் பாதுகாப்பு கருதி விமானம், கோவை சர்வதேச விமான நிலையத்திற்கு திருப்பி விடப்பட்டது. இதையடுத்து, இன்று காலை 7.45 மணியளவில் விமானம் தரையிறங்கியது. திடீரென கோவை விமான நிலையத்தில் விமானம் தரையிறங்கியதால் பயணிகள் சிறிதுநேரம் புரியாமல் குழம்பி போயினர். பின்னர் நிலைமை அறிந்து சமாதானம் ஆகினர்.


விமான நிலையத்தில் பயணிகளுக்கு உரிய வசதிகள் செய்து தரப்படும் என்று விமான போக்குவரத்து துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். வானிலை சீரான பின்னர், மீண்டும் விமானம் கோழிக்கோடு விமான நிலையம் புறப்பட்டு செல்லும் என்றும் அவர்கள் கூறி உள்ளனர். மோசமான வானிலையால் கோழிக்கோடு செல்லவேண்டிய விமானம், கோவை விமான நிலையத்தில் தரையிறங்கியதால் சிறிதுநேரம் பரபரப்பு நிலவியது.



நேற்று திருச்சியில் இருந்து சார்ஜா சென்ற விமானம் தொழில்நுட்ப கோளாறு காரணமாக திருச்சி விமான நிலையத்தில் 2 மணி நேரம் வானில் வட்டமடித்து பின்னர் பாதுகாப்பாக தரையிறக்கப்பட்டது. அந்த சம்பவத்தின் பரபரப்பு அடங்குவதற்குள் அதை ஒத்த சம்பவம் மீண்டும் நிகழ்ந்துள்ளது, குறிப்பிடத்தக்கது.

Advertisement