யானைகள் குடியிருப்பு பகுதிக்கு வருவதை தடுக்க ஆக்க பூர்வமான நடவடிக்கை; விவசாயிகள் குறை தீர்க்கும் கூட்டத்தில் ஆர்.டி.ஓ., உறுதி

கூடலுார் : 'கூடலுாரில் காட்டு யானைகள் குடியிருப்பு பகுதிக்கு வருவதை தடுக்க ஆக்கப்பூர்வமான நடவடிக்கை எடுத்து வருகிறோம்,' என, தெரிவிக்கப்பட்டுள்ளது.

கூடலுார் வன அலுவலர் அலுவலகத்தில் விவசாயிகள் குறை தீர்க்கும் கூட்டம் நடந்தது. டி.எப்.ஓ., வெங்கடேஷ் பிரபு தலைமை வகித்தார்.

கூட்டத்தில், விவசாயிகள் சார்பில் பங்கேற்றவர்கள், 'காட்டு யானைகள் விவசாய தோட்டங்களில் நுழைந்து விவசாய பயிர்களை சேதப்படுத்துவதை நிரந்தரமாக தடுக்க வேண்டும்; யானைகளால், சேதப்படுத்தப்படும் விவசாய பயிர்களுக்கு முழுமையான இழப்பீடு வழங்க வேண்டும்; விவசாயிகளை பாதிக்கும் நடவடிக்கைகளை எடுக்கக் கூடாது,' என்றனர்.

டி.எப்.ஓ., வெங்கடேஷ் பிரபு பேசியதாவது:

கூடலுார் வன கோட்டத்தில், 150 வன ஊழியர்கள், சுழற்சி முறையில், 8 மணி நேரம், கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இரவிலும், நவீன டிரோன் கேமரா மூலம் யானைகள் நடமாட்டத்தை கண்காணித்து வருகிறோம். வனத்துறையின் தொடர் நடவடிக்கை யால் யானைகளால் ஏற்பட்ட பாதிப்பு குறைந்துள்ளது. வனத்துறை மீது, சிலர் ஆதாரம் இன்றி புகார் கூறுகின்றனர்.

அதனைத் தவிர்த்து, ஆதாரத்தோடு புகார் தெரிவித்தால் அதற்கு தீர்வு காணப்படும். தற்போது கோடை காலம் என்பதால், வனப்பகுதியில் வறட்சியின் தாக்கம் அதிகமாக உள்ளதால், வனத்தீ அபாயம் உள்ளது. எனவே, பொதுமக்கள் எளிதில் தீப்பற்றக் கூடிய பொருட்களை வனத்தில் வீசி செல்வதை தவிர்க்க வேண்டும்.

வனத்தீ ஏற்பட்டால், அது குறித்து வனத்துறைக்கு தகவல் தெரிவிப்பதுடன், அதை கட்டுப்படுத்த வனத்துறைக்கு உதவ வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.

கூட்டத்தில், உதவி வன பாதுகாவலர் கருப்பையா, பயிற்சி ஐ.எப்.எஸ்., அதிகாரி சாய் சரண் ரெட்டி, பயிற்சி உதவி வன பாதுகாவலர் அருள்மொழி வர்மன், வனச்சரகர்கள் ராதாகிருஷ்ணன், சுரேஷ்குமார், வீரமணி, சஞ்சீவ், அய்யனார் மற்றும் விவசாயிகள் பிரதிநிதிகள் பங்கேற்றனர்.

Advertisement