ஊட்டி அருகே வன விலங்கு தாக்கி பெண் உயிரிழந்த சம்பவம் வீட்டில் முடங்கிய அரக்காடு மக்கள்

ஊட்டி, : ஊட்டி அருகே, அரக்காடு பகுதியில் வனவிலங்கு தாக்கி பெண் தொழிலாளி உயிரிழந்த சம்பவத்தை அடுத்து வன விலங்கு கண்காணிப்பு கேமராவில் சிக்காமல் உள்ளதால் மக்கள் அச்சத்துடன் உள்ளனர்.

ஊட்டி அருகே, பேரார் பொம்மன் நகரை சேர்ந்த கோபால் என்பவரின் மனைவி அஞ்சலை,50, தேயிலை தோட்டத்தில் இலை பறிக்க சென்றவர் வீடு திரும்பவில்லை. உறவினர்கள் தேடி வந்த நிலையில், கடந்த, 13ம் தேதி அரக்காடு அருகே உள்ள காலிபெட்டா பகுதியில் தேயிலை தோட்டத்தில் இலை பறிக்க சென்ற தொழிலாளர்கள், அங்கு வன விலங்கு தாக்கி பெண் ஒருவர் உயிரிழந்தை பார்த்த தொழிலாளர்கள் வனத்துறைக்கு நகரில் தெரிவித்தனர்.

சம்பவ பகுதிக்கு ரேஞ்சர் சசிக்குமார் தலைமையில் வன காவலர்கள், போலீசார் அங்கு சென்று ஆய்வு மேற்கொண்டனர். பின், கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தினர். 'பொது மக்கள் குறிப்பிட்ட பகுதிக்கு இலை பறிக்க செல்ல வேண்டாம்,' என , அறிவுறுத்தியுள்ளனர்.

இந்நிலையில், ஒரு வாரமாகியும் பொருத்தப்பட்ட கண்காணிப்பு கேமராவில் வன விலங்கு தென்படவில்லை. மக்கள் அச்சத்துடன் உள்ளனர். நேற்று, மாவட்ட கலெக்டர் குறை தீர்க்கும் கூட்டத்திற்கு அரக்காடு கிராம மக்கள் வந்து கலெக்டர் லட்சுமி பவ்யாவை சந்தித்து மனு அளித்தனர்.

கிராம மக்கள் கூறுகையில், 'அரக்காடு பகுதியில் வன விலங்கு தாக்கி பெண் தொழிலாளி உயிரிழந்த சம்பவத்தில், அங்கு பொருத்தப்பட்ட கண்காணிப்பு கேமராவில் இதுவரை வனவிலங்கு ஏதும் தென்படவில்லை.

கடந்த ஒரு வாரம் மக்கள் வேலைக்கு செல்ல முடியாமல் வீட்டில் முடங்கியுள்ளனர். உரிய நடவடிக்கை எடுக்க கோரி கலெக்டரிடம் மனு அளித்துள்ளோம்,'என்றனர்.

Advertisement