கேரளா பா.ஜ., தலைவராகிறார் ராஜிவ் சந்திரசேகர்; விரைவில் வெளியாகும் அறிவிப்பு

6

திருவனந்தபுரம்: முன்னாள் மத்திய அமைச்சர் ராஜிவ் சந்திரசேகர், கேரளா பா.ஜ., தலைவராக தேர்வு செய்யப்பட உள்ளார்.



கேரளாவில் பா.ஜ., மையக் குழுக் கூட்டம் இன்று (மார்ச் 23) நடைபெற்றது. இந்த கூட்டத்தில் பா.ஜ., மத்திய பார்வையாளர் பிரகலாத் ஜோஷி, கேரள மாநில மேலிட பொறுப்பாளர் பிரகாஷ் ஜவடேகர் பங்கேற்றனர்.


கூட்டத்தில் மாநிலத்தின் புதிய தலைவர் பற்றிய விவாதமும், ஆலோசனைகளும் நடைபெற்றன. முடிவில், மாநிலத்தின் புதிய பா.ஜ., தலைவராக ராஜிவ் சந்திரசேகரை இருவரும் பரிந்துரைத்தனர். இதையடுத்து, அவர் தலைவர் பதவிக்கான வேட்பு மனுவை தாக்கல் செய்தார். அவரது மனு பரிசீலிக்கப்பட்டு இன்றே ஏற்றுக் கொள்ளப்பட்டு விட்டது.


இதுகுறித்து பா.ஜ., தலைவர் முரளிதரன் கூறுகையில், மத்தியக் குழுக் கூட்டம் நடைபெற்றது. அதில் கட்சியின் தேசியத் தலைமையின் எண்ணங்களை வெளியிட்டோம். அதன் பின்னர் மத்தியக் குழுக் கூட்டத்தில், ஒருமனதாக ராஜிவ் சந்திரசேகர் கேரளாவின் அடுத்த மாநில தலைவராக தேர்வு செய்யப்பட்டார்.

புதிய தலைவர் பற்றிய அறிவிப்பு நாளை (மார்ச் 24) முறைப்படி வெளியிடப்படும். ராஜிவ் சந்திரசேகரின் தலைமையில், கேரளாவில் பா.ஜ., மேலும் வளரும் என்ற நம்பிக்கை உள்ளது என்றார்.


மத்தியில் பா.ஜ., 2வது முறையாக அரியணை ஏறிய போது, ராஜிவ் சந்திரசேகர் மத்திய அமைச்சராக இருந்தவர். கர்நாடகாவில் இருந்து 3 முறை ராஜ்ய சபா எம்.பி.யாக தேர்ந்தெடுக்கப்பட்டவர்.
தொழிலதிபரான ராஜிவ் சந்திரசேகர், கடந்தாண்டு லோக்சபா தேர்தலில் காங்கிரசின் சசி தரூரை எதிர்த்து திருவனந்தபுரம் தொகுதியில் போட்டியிட்டு தோல்வியை சந்தித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement