ரயிலில் மது பாட்டில் கடத்தியவர் கைது: திண்டுக்கல் வழியாக அதிகரிக்கும் கடத்தல்

திண்டுக்கல் : மைசூர் எக்ஸ்பிரஸ் ரயிலில் மதுரைக்கு வெளிமாநில மது பாட்டில்களை கடத்தியவரை திண்டுக்கல் ரயில்வே போலீசார் பிடித்து மது விலக்கு போலீசிடம் ஒப்படைத்தனர். இவ்வழித்தடத்தில் சில நாட்களாக ரயிலில் மது, குட்கா, கஞ்சா கடத்தில் அதிகரித்துள்ளது.


மதுரை மாவட்டம் மேலுார் கக்கன் தெருவை சேர்ந்தவர் முத்துஅமர்23. இவர் நேற்று மைசூரிலிருந்து துாத்துக்குடி செல்லும் மைசூர் எக்ஸ்பிரஸ் ரயிலில் பெங்களூருவிலிருந்து ஏறினார். இவர் கர்நாடகாவிலிருந்து 9 மது பாட்டில்களை மதுரைக்கு கடத்தி வந்தார். முன்பதிவில்லா பெட்டியில் அமர்ந்திருந்த அவர் மக்களோடு மக்களாக இயல்பாக பயணித்து கொண்டிருந்தார். ரயில் திண்டுக்கல் அருகே வந்தபோது ரயில்வே இன்ஸ்பெக்டர் துாயமணி வெள்ளைசாமி தலைமையிலான போலீசார் ரயிலில் உள்ள பயணிகளிடம் சோதனையில் ஈடுபட்டனர்.


அப்போது முத்துஅமர், போலீசாரை கண்டதும் ஒருவித அச்சத்துடன் இருந்தார். போலீசார் அவரை பிடித்து உடைமைகளை சோதனை செய்ததில் அதில் 9 வெளி மாநில மது பாட்டில்கள் இருந்தது. போலீசார் உடனே அவரை பிடித்து திண்டுக்கல் மது விலக்கு தடுப்பு பிரிவு போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். அதனடிப்படையில் திண்டுக்கல் ரயில்வே போலீஸ் ஸ்டேஷன் வந்த அவர்கள் இக்கடத்தலில் ஈடுபட்ட முத்துஅமரை, கைது செய்து 9 மது பாட்டில்களை பறிமுதல் செய்து விசாரிக்கின்றனர்.


திண்டுக்கல் ரயில் வழித்தடத்தில் கடந்த சில நாட்களாக வெளி மாநில மது பாட்டில்கள், கஞ்சா, குட்கா பொருட்கள் கடத்தும் சம்பவங்கள் அதிகரித்துள்ளது. இதில் ஈடுபட்ட ஒருசிலர் கைது செய்யப்பட்டுள்ளனர். மற்றவர்கள் அச்சமின்றி போதை பொருட்களை கடத்தும் சம்பவங்கள் அதிகரித்துள்ளது. ரயில்வே போலீசார் கூடுதல் கண்காணிப்பில் ஈடுபட வேண்டும்.

Advertisement